முஸ்லிம்களுக்கான 4.5% உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்கிறது மோடி அரசு?
டெல்லி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிவித்த முஸ்லிம்களுக்கான 4.5% உள் இடஒதுகீட்டை தற்போதைய பாஜக அரசு ரத்து செய்ய மும்முரம் காட்டத் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது.
2011ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு 4.5% உள் ஒதுக்கீடாக அறிவித்தது. இதற்கு அப்போதே பாஜக, சிவசேனா போன்ற கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.
இந்த உள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து அப்போதைய மத்திய அரசு உச்சநீதிமன்ற மேல்முறையீடு செய்துள்ளது.
அமைச்சர்கள் போர்க்கொடி
தற்போது இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலைகீழான முடிவெடுக்கப் போவதை சமூக நீதிக்கான அமைச்சர் தவார்சந்த் கெஹ்லாட் மற்றும் சிறுபான்மை விவகாரங்களுக்கான அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா ஆகியோரின் பேச்சுகள் வெளிப்படுத்துகின்றன.
மத அடிப்படையில் ஒதுக்கீடு கூடாது
இது குறித்து கருத்து தெரிவித்த சமூக நீதித்துறை கெஹ்லாட், முஸ்லிம்களுக்கு 4.5% உள் இடஒதுக்கீடு வழங்குவதை பாஜக அரசு கடுமையாக எதிர்க்கிறது. மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்கிறார்.
நஜ்மாவும் கடும் எதிர்ப்பு
சிறுபான்மை விவகாரங்களுக்கான அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லாவும், 'நாங்கள் முஸ்லிம்களுக்கு ஒருபோதும் இடஒதுக்கீடு வாக்குறுதி கொடுத்தது கிடையாது. காங்கிரஸ் தான் அவ்வாறு செய்தது. இடஒதுக்கீடு மட்டுமே முஸ்லிம்களின் வாழ்வை முன்னேற்ற வழி அமைக்கும் ஒரு தீர்வாகிவிட முடியாது. அது ஒரு சாக்கு போக்கு அவ்வளவுதான். ஆனால், நாங்கள் அரசியலமைப்பு சட்டத்தின் வழியாக ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்துவதில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். அது மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு செய்யப்படுவதை பற்றியது அல்ல. அதை அனுமதிக்கவும் செய்யாது. நாங்கள் அனைவருக்காகவும் பாடுபட தயாராக இருக்கிறோம்'' என்றார்.
முடிவுக்கு வருகிறது முஸ்லிம்கள் ஒதுக்கீடு
இதனால் உச்சநீதிமன்றத்தில் முஸ்லிம்களுக்கான உள் இடஒதுக்கீட்டுக்கான தடையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை மத்திய அரசு விலக்கிக் கொள்ளக் கூடும் எனத் தெரிகிறது. அத்துடன் அந்த உள் ஒதுக்கீட்டையே ரத்து செய்யக் கூடிய வாய்ப்பும் இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.