டிசிஎஸ் பெண் ஊழியர் உடல் எரிந்த நிலையில் மும்பையில் கண்டெடுப்பு- கற்பழித்து கொலை
மும்பை: கிட்டத்தட்ட பதினோறு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன, ஆந்திராவைச் சேர்ந்த 23 வயது டிசிஎஸ் பெண் ஊழியரின் உடல் நேற்று எரிந்த நிலையில் மும்பையில் மீட்கப் பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் 23 வயது எஸ்தர் அனுயா. இவர் டிசிஎஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஞினியராக பணி புரிந்து வந்தார். கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்த அனுயா, கடந்த 4ம் தேதி, விஜயவாடாவிலிருந்து ரயிலில் மும்பை புறப்பட்டுச் சென்றார்.
ரயிலில் பயணம் செய்த போது, சோகாப்பூர் அருகே இரவு 10 மணியளவில் தனது தந்தை பிரசாத் உடன் கடைசியாக தொலைபேசியில் பேசியுள்ளார் அனுயா. ஹாஸ்டல் சென்றடைந்ததும் மீண்டும் அழைப்பதாக தெரிவித்துள்ளார் அனுயா. ஆனால், அதனைத் தொடர்ந்து மகளிடம் இருந்து எந்த அழைப்பும் வராததால் சந்தேகமடைந்த அவரது தந்தை பிரசாத், அவரது அலுவலக மற்றும் ஹாஸ்டல் நண்பர்களிடம் அனுயா குறித்து விசாரித்துள்ளார். அப்போது தான் அனுயா காணாமல் போனது தெரிய வந்துள்ளது.
உடனடியாக, இது குறித்து மும்பை மற்றும் விஜயவாடா போலீசில் புகார் அளித்தார் பிரசாத். போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், நேற்று மும்பை கஞ்சூர்மார்க் பகுதியில் எரிந்த நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது.
பிரசாத் நேரில் வந்து அடையாளம் காட்டியதில், அது காணாமல் போன அனுயா தான் என்பது உறுதியாகியுள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.
ரயிலில் பயணம் செய்த அனுயா, கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு கொலை செய்யப் பட்டுள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இப்படுபாதக செயலில் ஈடுபட்டவர்கள் யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.