மிசோரமில் கிடுகிடுவென அதிகரித்த கொரோனா பாதிப்பு- மத்திய குழு ஆய்வு- மியான்மர் அகதிகள் காரணமா?
ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இதனையடுத்து மத்திய அரசின் அதிகாரிகள் குழு மிசோரமில் ஆய்வு மேற்கொண்டது.
மிசோரம் மாநிலத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மிசோரமில் செவ்வாய்க்கிழமையன்று 1,681 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
மிசோரமில் இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு 99,856. மேலும் மொத்தம் 331 பேர் கொரோனாவால் மிசோரமில் உயிரிழந்துள்ளனர். மிசோரம் முதல்வர் ஜோரம் தங்காவின் மூத்த சகோதரி அண்மையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

மிசோரம் 3-வது இடம்
நாட்டில் கேரளாவில்தான் அதிகமான ஒருநாள் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. கேரளாவில் 9,735 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. மகாராஷ்டிராவில் 2,401 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 3-வதாக மிசோரமில்தான் 1,681 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதற்கு அடுத்து 4-வதாக தமிழகத்தில் நேற்று 1,449 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

மத்திய குழு ஆய்வு
மிசோரமில் கொரோனா பாதிப்பு விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் மத்திய அரசு அதிகாரிகள் குழு நேற்று அம்மாநிலத்துக்கு சென்று நிலைமைகளை ஆய்வு செய்தது. மேலும் மாநில அரசின் குழுவும் தற்போதைய கொரோனா கால கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது, பரிசோதனைகளில் மாற்றம் செய்வது உள்ளிட்ட பரிந்துரைகளை மாநில அரசுக்கு வழங்கி உள்ளது. மிசோரமில் கொரோனாவை கட்டுப்படுத்த முழு வீச்சில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மருத்துவ வசதி விரிவாக்கம்
மிசோரம் மாநிலத்தில் தற்போதைய நிலையில் 341 படுக்கைகளுடன் கூடிய ஜோரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. இம்மருத்துவமனையில் 34 ஐசியூ படுக்கைகள் உள்ளன. இது தவிர 18 கொரோனா தடுப்பு சுகாதார மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆகையால் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் கொரோனா சிறப்பு வார்டு தொடங்கி அதற்கென 10 ஐசியூ படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என்றும் மாநில அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அகதிகள் காரணமா?
இதனிடையே மிசோரம்-மியான்மர் எல்லை பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மியான்மரில் இருந்து ராணுவத்துக்கு அஞ்சி அகதிகளாக வந்தவர்களே அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூலமே மிசோரமில் கொரோனா அதிகளவு பரவி இருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications