மிசோரம் ஆளுநர் அசிஷ் குரேஷி டிஸ்மிஸ்! 8 மாதங்களில் மிசோரமின் 6வது ஆளுநர் மாற்றம்!
அய்ஸ்வால்: மிசோரம் மாநில ஆளுநர் பதவியில் இருந்து அசிஷ் குரேஷி டிஸ்மிஸ் செ3ய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மேற்கு வங்க ஆளுநர் கூடுதல் பொறுப்பாக அப்பதவியை வகிப்பார் என்று ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்றது தொடக்கமே மிசோரம் ஆளுநர் பதவி என்பது பஞ்சாயத்தாக இருந்து வருகிறது. மோடி அரசு பதவியேற்ற போது அம்மாநில ஆளுநராக இருந்தவர் வைக்கம் புருஷோத்தமன்.

மோடி அரசு பதவியேற்ற ஓரிரு மாதங்களிலேயே வைக்கம் புருஷோத்தம் நாகாலாந்து ஆளுநராக இடம் மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் ஆளுநர் பதவி என்பது அரசியல் அமைப்பு பதவி.. அதை இப்படி பந்தாடக்கூடாது என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவிட்டு ராஜினாமாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார் அவர்.
அப்போது குஜராத் மாநிலத்தில் மோடி ஆட்சிக் காலத்தில் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்த கமலா பெனிவால் மிசோரம் ஆளுநராக தூக்கி அடிக்கப்பட்டார். ஆனால் ஒரு மாதம் கூட கமலா பெனிவால் அப்பதவியில் இல்லை.. அவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
கமலா பெனிவாலுக்குப் பின்னர் வினோத் குமார் துக்கால் 20 நாட்கள் பதவி வகித்தார். மேலும் மகாராஷ்டிரா ஆளுநர் சங்கரநாராயணன் மிசோரமுக்கு மாற்றப்பட அவரும் பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னர் மிசோரம் மாநில ஆளுநர் பதவியை கூடுதல் பொறுப்பாக மேகாலய ஆளுநர் கிருஷண் காந்த் பால் கவனித்து வந்தார்.
கடந்த டிசம்பர் மாதம் உத்தரகாண்ட் மாநில ஆளுநர் பொறுப்பில் இருந்த அசிஷ் குரேஷி மிசோரம் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
தற்போது அசிஷ் குரேஷியும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். மிசோரம் மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பை மேற்கு வங்கத்தின் ஆளுநர் திரிபாதி கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்று ஜனாதிபதி மாளிகை செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட ஆளுநர்களில் குரேஷியும் ஒருவர். இவரது பதவிக் காலம் 2017 ஆம் ஆண்டு வரை உள்ளது. மத்திய அரசுடனான தொடர்ச்சியான மோதல் போக்கால் திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications