கர்நாடகத்தில் நடந்த கூட்டத்தில் நடந்தது என்ன... நிர்மலா சீதாராமன் விளக்கம்!
டெல்லி: கர்நாடகத்தில் வெள்ள ஆய்வு கூட்டத்தின்போது எனன நடந்தது என்பது குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பாதுகாப்புத் துறை விளக்கம் அளித்துள்ளது.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் கடுமையான மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று சேதமடைந்த பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மாநில அமைச்சர் ரமேஷ் குறுக்கிட்டு அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க அழைத்தார்.
இதனால் பொறுமையை இழந்த நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்கள் மத்தியில் ஒரு மாநில அமைச்சர் மத்திய அமைச்சருக்கு நிகழ்ச்சி நிரல் கொடுப்பதா என கேட்டு கடிந்து கொண்டார். இது பெரும் கண்டனத்துக்குள்ளானது.
நிர்மலாவுக்கு கண்டனம்
இதையடுத்து மாநில அமைச்சர் ரமேஷ், நிர்மலா சீதாராமன் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தால் மக்களின் கஷ்டங்கள் தெரிந்திருக்கும். அவர் மாநிலங்களவை எம்பிதானே என்று விமர்சனம் செய்தார். நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்த நிலையில் தற்போது மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
நிகழ்ச்சி நிரல்
இதுகுறித்து அந்த அமைச்சகம் கூறுகையில், வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுவது குறித்த நிகழ்ச்சி நிரலை இறுதி செய்தது மாவட்ட நிர்வாகம்தான். இந்த நிகழ்ச்சி நிரல் நிர்மலா சீதாராமன் குடகுக்கு வருவதற்கு 2 நாட்களுக்கு முன்னர் சம்பந்தப்பட்டவர்களுக்கு நிகழ்ச்சி நிரல் விநியோகம் செய்யப்பட்டது.
கூட்டத்தை கைவிட்டுவிட்டு
இதனிடையே முன்னாள் ராணுவத்தினர் உடனான சந்திப்புக் கூட்டம் மாவட்ட நிர்வாகம் பரிந்துரையின்பேரில் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்துவிட்டு நிர்மலா சீதாராமன் முன்னாள் ராணுவத்தினருடன் உரையாடல் நடத்தி குறைகளை கேட்டறிந்த போது மாநில அமைச்சர் ரமேஷ் அந்த கூட்டத்தை கைவிட்டு விட்டு அதிகாரிகள் கூட்டத்தை நடத்துமாறு கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சி நிரலில் உள்ளது
அப்போது முன்னாள் ராணுவத்தினரின் நலம் பாதுகாப்பு துறையின் முக்கிய பகுதியாகும். அது மட்டுமல்லாமல் அந்த உரையாடல், நிகழ்ச்சி நிரலிலும் இடம்பெற்றுள்ளது. எனினும் அதை புரிந்து கொள்ளாமல் மாநில அமைச்சர் முன்னாள் ராணுவத்தினருடனான கூட்டத்தை நிறுத்துமாறு கூறி கொண்டே இருந்தார்.
மாண்பை குலைத்துவிட்டார்
மேலும் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவை உறுப்பினர் என்று அமைச்சர் ரமேஷ் கூறியது இந்திய கொள்கையை குறித்து அவருக்கு புரிதல் இல்லாமையே காரணம் ஆகும். நாடாளுமன்றத்தின் மரியாதையை, மாண்பை குறைத்து விட்டார் என்று பாதுகாப்பு துறை அமைச்சகம் விளக்கம் அளித்தது.