மோடி தரும் மேலும் 2 புதிய திட்டங்கள்.. நுகர்வோருக்கும், வணிகர்களுக்கும்!
நுகர்வோர் மற்றும் சிறுவணிகர்களுக்கென 2 புதிய திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
டெல்லி: நுகர்வோருக்கு 'லக்கி கிரஹக் யோஜனா' என்றும் சிறுவணிகர்களுக்கு 'டிகி தன் வியாபார் யோஜனா' என்றும் 2 புதிய திட்டங்களை பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார். அது இன்று முதலே அமல் படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மான் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் வானொலியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அதன்படி இன்று காலை 11 மணிக்கு வானொலியில் அவர் உரையாற்றினார். அதில், இன்று கிறிஸ்துமஸ் தினம் என்பதால், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். இரக்க உணர்வையும், சேவை மனப்பான்மையையும் குறிக்கும் நாள் கிறிஸ்துமஸ் என்று மோடி கூறினார்.

அதே போன்று இன்று முன்னாள் பிரதமர் வாஜ்பேய் பிறந்த நாள் என்பதால் அவருக்கும் பிறந்த தின வாழ்த்துக்களை வானொலி பேச்சில் மோடி தெரிவித்துக் கொண்டார். நாட்டின் வளர்ச்சியில் வாஜ்பாயின் பங்களிப்பை தேசம் என்றைக்கும் மறக்காது என்று வாஜ்பாயிக்கு புகழாரம் சூட்டினார் மோடி.
இன்றைய தன்னுடைய வானொலி பேச்சின் ஊடாகவே நுகர்வோருக்கும், சிறுவணிகர்களுக்கும் 2 புதிய திட்டங்களை மோடி அறிவித்தார். அதன்படி, நுகர்வோருக்கு 'லக்கி கிரஹக் யோஜனா' என்றும், சிறுவணிகர்களுக்கு 'டிகி தன் வியாபார் யோஜனா' என்றும் 2 புதிய திட்டங்கள் இன்றிலிருந்து அமல்படுத்தப்பட உள்ளன.
தொடர்ந்து பேசிய அவர், மின்னணு பணப்பரிவர்த்தனையை ஒருவர் மற்றொருவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் அசாம் மாநில அரசை பாராட்டுகிறேன் என்றும் கூறினார். மேலும், ஜன்தன் வங்கி கணக்கு மூலம் 20 கோடி பேர் ரூபே கார்டு வைத்துள்ளனர் என்று குறிப்பிட்ட மோடி, மின்னணு பரிவர்த்தனை தற்போது 300 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். மின்னணு பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே தற்போது அதிகரித்துள்ளது வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கறுப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்களின் வீடுகளில் வருமானவரிச் சோதனைத் தொடர்ந்து நடைபெறும் என்றும், வருமானவரித் துறையின் சோதனை இத்துடன் முடியாது என்றும் மோடி கூறினார். கறுப்புப் பணம் பதுக்கியவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க பலரும் வழி தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் தவறு செய்தவர்கள் மீது அரசு எடுக்கும் நடவடிக்கையை மக்கள் ஆதரிக்கின்றனர் என்றும் மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications