அமெரிக்காவில் நாளை துவங்கும் 4வது அணு சக்தி பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கும் மோடி
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது வாஷிங்டன் நகரில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கும் நான்காவது அணு சக்தி பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி பெல்ஜியம், அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள நேற்று இரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் கிளம்பினார். பயணத்தின் முதல்கட்டமாக அவர் கடந்த 22ம் தேதி தீவிரவாத தாக்குதல் நடந்த பெல்ஜியத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியத்தில் இருந்து அவர் அமெரிக்கா செல்கிறார். வாஷிங்டன் நகரில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கும் நான்காவது அணு சக்தி பாதுகாப்பு மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். மாநாட்டில் அவர் அணு சக்தி பாதுகாப்பு மற்றும் அணுசக்தி தொழில்நுட்பங்கள், கருவிகளின் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்த இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கிறார்.
மாநாட்டிற்கு வரும் சில நாட்டு தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்று கூறப்படுகிறது. முன்னதாக மாநாட்டிற்கு வருகையில் மோடி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்து பேசக்கூடும் என்று கூறப்பட்டது. ஆனால் ஷெரீப் தனது அமெரிக்க பயணத்தை ரத்து செய்துவிட்டார்.
ஷெரீப் அணு சக்தி பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் லாகூரில் நடந்த தீவிரவாத தாக்குதலையடுத்து அவர் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார்.












Click it and Unblock the Notifications