அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து, டெல்லியில் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் அடுத்த வாரம் தொடங்கி, மே மாதம் 13ஆம் தேதி வரை இரு அமர்வுகளாக நடைபெறுகிறது. இந்த கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பைக் கோரும் வகையில், டெல்லியில் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்ளோடு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி, மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டம், அனைத்துக் கட்சிக் கூட்டம் கிடையாது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை மட்டுமே பிரதமர் மோடி கோரவுள்ளார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பிறகு நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடர்கள் பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக முடங்கின. ஜிஎஸ்டி மசோதா உள்பட பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
ஜிஎஸ்டி மசோதாவை ராஜ்யசபாவில் நிறைவேற்ற எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம். ராஜ்யசபாவில் ஆளும் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை இல்லை. ஆகையால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டிய கட்டாயத்தில் பா.ஜ.க. உள்ளது. இதன் ஒருபகுதியாகத் தான் மோடி இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.