'பிரம்மாஸ்திரத்துடன்' நாடாளுமன்றத்திற்கு வரும் எதிர்க்கட்சிகள்! மோடி சர்க்காரின் முதல் அக்னி பரீட்சை
டெல்லி: நரேந்திரமோடி தலைமையிலான அரசு பதவிக்கு வந்த பிறகு முதன்முறையாக உண்மையான நாடாளுமன்ற வெப்பத்தை இப்போதுதான் பார்க்கப்போகிறது. முதல் கூட்டத்தொடர் சம்பிரதாயமான ஒன்றாக முடிந்து விட்ட நிலையில், விலைவாசி உயர்வு பிரச்சினை துவங்கியுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் மோடி அரசை இறுக்கி பிடிக்கும் ஆயுதமாக மாறப்போகிறது.
சம்பிரதாயம்
மோடி தலைமையிலான பாஜக அரசு மே 26ம்தேதி பதவியேற்றது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் நடந்த குறுகிய கால முதலாவது கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் உரையும், அதன்பிறகு குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசுவதும் நடந்தது. ஆட்சிக்கு வந்த சில நாட்களில் கூடிய கூட்டத்தொடர் என்பதாலும், முதலாவது கூட்டத்தொடர் என்பதாலும் அது ஒரு சம்பிரதாய கூட்டத்தொடராகவே முடிந்தது.
அக்னி பரீட்சை
இந்நிலையில் இன்று முதல், நாடாளுமன்ற, பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியுள்ளது. ஆகஸ்ட் 14ம்தேதிவரை இக்கூட்டத்தொடர் நடக்கிறது. இம்மாதம் 8ம்தேதி ரயில்வே பட்ஜெட்டும், 10ம்தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில்தான் மோடி அரசு, முதன்முறையாக, அக்னி பரீட்சையை சந்திக்க உள்ளது.
இதுதான் பிரம்மாஸ்திரம்
எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அஸ்திரம், விலைவாசி உயர்வு. ஊழல் உள்ளிட்ட மற்ற பிரச்சினைகளைவிட, மக்களை அதுவும் குறிப்பாக, அனைத்து தரப்பு மக்களையும், நேரடியாக பாதிப்பது விலைவாசி உயர்வு என்பதால் இந்த பிரச்சினை எதிர்க்கட்சிகளுக்கு சாதாரண அஸ்திரமல்ல. பிரம்மாஸ்திரம்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும்
விலைவாசி உயர்வுக்காக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினால், அது பெரும்பான்மை மக்களால் கண்டிப்பாக வரவேற்கப்படும் என்பதால் காங்கிரஸ் மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் அனைத்துமே இதில் வரிந்து கட்டி வாதாடும். பாஜகவை தவிர அனைத்து பிற கட்சிகளுமே மக்களிடம் நல்ல பெயர் எடுக்க விலைவாசி உயர்வை நியாயப்படுத்த முற்படாது.
இக்கட்டில் பாஜக
மழை பெய்யவில்லை, கடந்த கால அரசின் தவறான பொருளாதார கொள்கை, பதுக்கல்காரர்கள் தொல்லை, மாநில அரசுதான் இதற்கு பொறுப்பு என்பது போன்ற பழைய, பல்லவிகளை மீண்டும் பாடினால், அது உண்மையாகவே இருந்தபோதிலும், பாஜக மீதுதான் மக்கள் கோபப்படுவார்களே தவிர, ஆகா அருமையான கண்டுபிடிப்பு என்று பாராட்டமாட்டார்கள். எனவே, விலைவாசியை குறைக்க உறுதியான நடவடிக்கையை எடுப்பது குறித்து, திட்டவட்டமாக மத்திய அரசு அறிவித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பாஜகவால் ஏமாற்ற முடியாது..
விலைவாசியை குறைக்க உறுதியான அறிவிப்பை வெளியிடுவது என்பது ஏதோ நீண்ட கால திட்டம் கிடையாது; அறிவித்துவிட்டு அப்படியே கிடப்பில் போடுவதற்கு. உடனடியாக அந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்தாக வேண்டும். அப்படிப்பட்ட மந்திரக்கோல் எதுவும் நிதி அமைச்சரிடம் இருக்காது என்று நம்பலாம். அப்படியிருந்திருந்தால், எப்போதோ வெங்காயம் விலையை, விண்ணில் இருந்து இறக்கியிருக்க முடியும். எனவே மத்திய அரசை திருதிருவென விழிக்க வைக்கும் பிரம்மாஸ்திரமாக விலைவாசி உயர்வு மாறியுள்ளது.
நாகாஸ்திரங்களும் உள்ளன..
விலைவாசி உயர்வுதான் எதிர்க்கட்சிகளின் பிரம்மாஸ்திரம் என்றால், இது தவிர, நாகாஸ்திரம், வருணாஸ்திரம், அக்னியாஸ்திரம் போன்ற பல அஸ்திரங்களும் அவர்களிடம் உள்ளன. கச்சா எண்ணை விலை உயர்வு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு போன்றவற்றை விவாதிக்க இடதுசாரிகள் வலியுறுத்த உள்ளனர். விவசாயிகள் பிரச்சினைகளும், காம்ரேட்டுகளால் புயலை கிளப்ப உள்ளது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்யவும் கம்யூனிஸ்டுகள் வலியுறுத்துகிறார்கள்.
கோபால் சுப்பிரமணியன் பிரச்சினை..
உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கான சிபாரிசு பட்டியலில் இருந்து கோபால் சுப்பிரமணியன் பெயரை நீக்கியதால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தியடைந்துள்ளது, ராணுவ தளபதி நியமனம் குறித்து மத்திய அமைச்சர் வி.கே.சிங் கூறிய கருத்துகள், ஏழ்மை குறித்து ரங்கராஜன் அளித்துள்ள அறிக்கை போன்றவையும் எதிர்க்கட்சிகளின் வாய்க்கு கிடைத்துள்ள அவலாக பார்க்கப்படுகிறது.
எதற்கும் தயார் என்கிறார் வெங்கய்யா
எங்களுக்குதான் எதிர்க்கட்சி அந்தஸ்து வேண்டும் என்று காங்கிரசும் கூச்சல்போடப்போகிறது. அதே நேரம் எதற்கும் அரசு தயாராக உள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்யாநாயுடு தெரிவித்தார். அனைத்து பிரச்சினைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச போதிய கால அவகாசம் கொடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
புதிய சட்டங்கள்
இந்த கூட்டத்தொடரின்போது, 'இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (சட்டத்திருத்தம்)-2014' சட்டத்தை மாற்றி புதிய சட்ட மசோதாவை தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. ஆந்திராவின் போலாவரம் அணைக்கட்டு திட்டத்தை செயல்படுத்த அரசு பிறப்பித்த அரசாணையை ஈடு செய்வதற்கான சட்டமும் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும், கடந்த ஆட்சியில் நிலுவையில் இருந்த பல சட்ட மசோதாக்களை இக்கூட்டத்தொடரில் தாக்கல் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது.