இந்திய -சீனப் போர்: "அதி பயங்கர ரகசியத்தை" வெளியிட மத்திய அரசு மறுப்பு!
டெல்லி: இந்தியா, சீனா இடையே போர் நடந்து ஆண்டுகள் 54 ஆகி விட்டன. ஆனால் அந்தப் போர் தொடர்பான மிக முக்கியமான ரகசிய அறிக்கை ஒன்று இன்னும் வெளியுலகின் கண்களில் படாமல் ரகசியமாகவே பாதுகாக்கப்பட்டு வருகிறது.
சீனப் போர் குறித்த அறிக்கைதான் அது. அதை மிகவும் பாதுகாக்கப்பட்ட ரகசிய ஆவணமாக இந்திய அரசு பாதுகாத்து வருகிறது. ஹெண்டர்சன் ப்ரூக்ஸ் - பகத் எழுதிய அறிக்கை அது. 1962ம் ஆண்டு இந்தியா, சீனா இடையே நடந்த போர் தொடர்பான அறிக்கை.

இந்த அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சராக இல்லாதபோது, பாஜக ஆட்சியில் இல்லாதபோது அருண் ஜேட்லி ஒருமுறை வலியுறுத்தியிருந்தார். தற்போது அவர் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் நிதியமைச்சராகவும் இருக்கும் நிலையில் தனது நிலையிலிருந்து பல்டி அடித்துள்ளார்.
இந்த அறிக்கையை வெளியிடக் கோரி ராஜ்யசபா எம்.பி. எச்.கே.துவா, ஜேட்லிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு ஜேட்லி அளித்துள்ள பதிலில், நாட்டின் நலன் கருதி இதைச் செய்ய முடியாது. இதைச் செய்தால் அது நாட்டு நலனுக்கு உகந்தாதக இருக்காது என்று கூறியுள்ளார் ஜேட்லி.
இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹென்டர்சன் ப்ரூக்ஸ்- பகத் அறிக்கையை வெளியிட வேண்டும் என்ற கருத்துக்கள் இருப்பதை அரசு அறியும். இது அதி உயர் ரகசிய ஆணம். இதை வெளிப்படுத்த இயலாது. மேலும், இந்த அறிக்கையை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ வெளியிட்டால் அது நாட்டு நலனுக்கு உகந்ததாக இருக்காது என்று ஜேட்லி தெரிவித்துள்ளார்.
ஆனால் இதே பாஜக எதிர்க்கட்சியாக இருந்தபோது இந்த அறிக்கையை வெளியிட மறுத்ததற்காக காங்கிரஸ் கூட்டணி அரசை விமர்சித்திருந்தது என்பது நினைவிருக்கலாம்.
கடந்த மார்ச் மாதம் கூட இதுகுறித்து ஜேட்லி கருத்து தெரிவிக்கையில், பல வருடங்களுக்கு முன்பே இதை வெளியிட்டிருக்க வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2010, ஏப்ரல் மாதம் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறுகையில், இதில் உள்ள விஷயங்கள் மிகவும உணர்ச்சிப்பூர்வமானவை. எனவே வெளியிடுவது உகந்ததாக இருக்காது என்று கூறியிருந்தார்.
ஆனால் அதை விமர்சித்த பாஜக, நேருவின் தவறான வெளிநாட்டுக் கொள்கை குறித்த விஷயங்கள் இதில் உள்ளன. இதை வெளியி்ட்டால், 2014 லோக்சபா தேர்தலில் நேருவின் பேரனான ராகுல் காந்திக்கு பாதிப்பு ஏற்படும் என காங்கிரஸ் அஞ்சுகிறது என்று கூறியிருந்தது.
தற்போது இந்த அறிக்கை பாதுகாப்பு அமைச்சகத்தில் பத்திரமாக தூங்கிக் கொண்டுள்ளது - தன்னுள் அதி உயர் ரகசியத்தை பதுக்கி வைத்தபடி.












Click it and Unblock the Notifications