அருண் ஜேட்லி பதவி விலகுமாறு பிரதமர் மோடி சிக்னல் காட்டியுள்ளார்: சீதாராம் யெச்சூரி
டெல்லி: ஊழல் புகாரில் சிக்கியுள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பதவி விலக வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சூசகமாக தெரிவித்துள்ளார் என மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.
டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடுகளில் அருண் ஜேட்லிக்கு தொடர்பு இருப்பதாகவும் இதன் காரணமாக அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இன்று இவ்விவகாரம் குறித்து பேசிய பிரதமர் மோடி, ஹவாலா மோசடி வழக்கில் இருந்து குற்றமற்றவராக அத்வானி வெளிவந்தது போல, அருண் ஜேட்லியும் இந்த வழக்கில் இருந்து விடுபடுவார் என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில், இதுகுறித்து இன்று பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீதாராம் யெச்சூரி கூறுகையில், அத்வானி பெயருடன் இணைத்து பேசியதன் மூலம், அருண் ஜேட்லி ராஜினாமா செய்து புகார்களிலிருந்து விடுபட்டு மீண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடி சூசகமாகத் தெரிவிப்பதாகவே நான் நினைக்கிறேன்.
அத்வானியைப் போல நீங்களும் பதவி விலகுங்கள் என்று அவருக்கு சிக்னல் கொடுத்திருப்பதாகவே, மோடியின் கருத்து இருக்கிறது என்று யெச்சூரி கூறியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு கற்கள் இறக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து கருத்து தெரிவித்த யெச்சூரி, அங்கு மேற்கொண்டு எந்த செயலிலும் இறங்க கூடாது என ஒருமித்த உடன்பாடு உள்ளது. இதை மீற அவர்கள் விரும்பினால், சட்டம் தன் கடமையை செய்யும் என்றார்.












Click it and Unblock the Notifications