மோடியின் 'ஸ்மால்' அமைச்சரவை.... பிரணாபிடம் இன்று பட்டியல் ஒப்படைப்பு!
டெல்லி: நரேந்திர மோடி சிறிய அமைச்சரவையை அமைக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களின் இறுதிப் பட்டியல் இன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
அமைச்சரவை தொடர்பாக மோடி தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வந்தார். ஒரு வழியாக இந்த ஆலோசனைகள் முடிவடைந்து தற்போது அமைச்சரவை இறுதி செய்யப்பட்டு விட்டதாம்.
இன்று குடியரசுத் தலைவரிடம் இறுதிப் பட்டியல் ஒப்படைக்கப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த அமைச்சரவை சிறிய அளவில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த அமைச்சர்களுடன் நாளை மோடி நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
புதிய அமைச்சரவையில் சீனியர்களான ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, நிதின் கத்காரி, சுஷ்மா சுவராஜ், அருண் ஷோரி, ரவிசங்கர் பிரசாத் ஆகியோருக்கு இடம் கிடைத்திருப்பதாக தெரிகிறது.
மேலும் சிவசேனா, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி ஆகிய கூட்டணிக் கட்சிகளுக்கும் இடம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். அதேசமயம், இன்னொரு கூட்டணிக் கட்சியான அகாலிதளம் அமைச்சரவையில் சேர மாட்டோம் என்று அறிவித்துள்ளது.