ரூ.15 லட்சம் எங்கே? மோடி “பொய்களின் சர்தார்” - இதற்காக தொழிற்சாலையே திறந்துள்ளார் - கார்கே சுளீர்
ராய்ப்பூர்: பொய் சொல்லும், திட்டும் தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து இருக்கிறார் என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்து இருக்கிறார்.
கடந்த மாதம் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி ராஜஸ்தானில் நவம்பர் 30 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மிசோரம் மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

டிசம்பர் 3 ஆம் தேதி அனைத்து மாநிலங்களிலும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் பரப்புரைகளில் தீவிரமாக ஈடுபட தொடங்கி உள்ளார்கள். ஆளும் காங்கிரஸ், பாஜக ஆகியவை சத்தீஸ்கர் மாநிலத்தில் பிரதான கட்சிகளாக உள்ளன. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கே வெற்றிவாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அம்மாநிலத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
நவம்பர் 17 ஆம் தேதி தேர்தலை சந்திக்கும் அபான்புர் பகுதிகளில் பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், "பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் எதுவுமே பேச மாட்டார். தேர்தல் பிரச்சார கூட்டங்களில் மட்டுமே பேசுவார். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு யாரையும் இழந்து பேச மாட்டார். இந்திரா காந்தியும் அப்படிதான். ஆனால், இன்று பாஜக தலைவர்களும், மோடி காலை தூங்கி விழித்தவுடன் யாரையாவது திட்டி பேசுகிறார்கள்.
காங்கிரஸ் ஆட்சியில் ஏராளமான தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன. ஆனால், மோடி ஒரு தொழிற்சாலையை தொடங்கியுள்ளார். பொய்களை பேசுவதும், இழிவுபடுத்துவதுமே அதன் வேலை. எங்கு சென்றாலும் பொய் சொல்கிறார். 2014 ஆம் ஆண்டு பாஜக வெற்றிபெற்றால் ஒவ்வொரு குடிமகனுக்கு ரூ.15 லட்சம் தருவதாக சொன்னார். 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக கூறினார். விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதாக வாக்குறுதி அளித்தார். இதில் ஏதாவது ஒன்றை அவர் செய்தாரா? இப்போது சொல்லுங்கள், பொய் சொல்வது யார் என்று?

பொய்களின் சர்தார் என்று நாங்கள் அவரை அழைத்தால் எங்களை குறிவைக்கிறார். மணிப்பூரில் வன்முறைகள் நடந்துகொண்டு இருந்தபோது அவர் சுற்றிக்கொண்டு இருந்தார். அது பற்றி அவர் நாடாளுமன்றத்தில் வாய் திறந்து பேசவே இல்லை. வாக்குகளுக்காக அவர் தற்போது தேர்தல் பிரச்சார கூட்டங்களில் வாய் திறக்கிறார். ஓட்டுக்காக மட்டுமே அவர் பேசுவார். பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பேசவே மாட்டார். காங்கிரஸ் அரசின் மீது களங்கம் கற்பிக்க 30 சதவீத கமிசன் என்று பாஜக பேசுகிறது. ஆனால், கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்றபோது 40 சதவீத கமிஷன் வாங்கினார்கள்." என்றார்.












Click it and Unblock the Notifications