நர்சரி குழந்தை நான் பிஎச்டி டாக்டர் என்று கூறுவது போல இருக்கிறது மோடி பேச்சு.. குர்ஷித் தாக்கு
பரூக்காபாத்: நர்சரி படிக்கும் குழந்தை ஒன்று தன்னைத் தானே டாக்டர் என்று கூறிக் கொள்வது போல உள்ளது, குஜராத் கலவரத்தில் தான் அப்பாவி என்று நரேந்திர மோடி கூறுவது என்று மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்.
ஏற்கனவே நரேந்திர மோடியை ஆண்மையற்றவர் என்று கூறி சர்ச்சைக்குள்ளானவர் குர்ஷித். இந்த நிலையில், தற்போது மீண்டும் மோடியைச் சாடியுள்ளார் குர்ஷித்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 2002 கலவரம் தொடர்பாக ஒரு மாஜிஸ்திரேட் கோர்ட் மோடிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இது உண்மை. இப்படி இருக்கையில் தான் நிரபராதி என்று மோடி கூறுவது, ஒரு நர்சரி பள்ளிக் குழந்தை தன்னைத் தானே டாக்டர் என்று கூறிக் கொள்வதற்குச் சமமாகும். நான் பிஎச்டி முடித்து விட்டேன், நான் டாக்டர் என்று கூறுவதற்குச் சமம். எப்படி அது சாத்தியமாகும்.
குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோதுதான் அத்தனை சம்பவங்களும் நடந்தன. 170க்கும் மேற்பட்டோர் இந்த வழக்குகளில் இதுவரை ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர். மாயா கோத்னானி அவர்களில் ஒருவர். அவர் அமைச்சராக இருந்தவர் என்று கூறியுள்ளார் குர்ஷித்.
குர்ஷித் பேச்சு குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், குர்ஷித் கூறியதை ஒதுக்கித் தள்ள வேண்டும். கீழ்நீதிமன்றம் இருந்தாலும் அது நீதிமன்றம்தான். அது குற்றமற்றவர் என தீர்ப்பளித்துள்ளது. இதற்கு எதிராக கருத்து தெரிவிப்பது நீதிமன்ற அவமதிப்பு. அது வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் குர்ஷித்துக்கு தெரியவில்லை. ராகுல் கூறியதை சல்மான் குர்ஷித்தும் மற்ற இதர தலைவர்களும் எதிரொலிக்கின்றனர்'' என்றார்.