எனக்கு எதிராக தேர்தல் ஆணையம் பாரபட்சம்- மோடி
வாரணாசி: தேர்தல் ஆணையம் தனக்கு எதிராக பாரபட்சம் காட்டுவதாக பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
குஜராத்தின் வதோதரா மற்றும் உத்தரப் பிரதேசத்தின் வாராணசி ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் மோடி போட்டியிடுகிறார். வதோதராவில் ஏற்கெனவே வாக்குப்பதிவு முடிந்து
விட்டது. வாராணசியில் வரும் 12ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பாஜகவினர் தேர்வு செய்த இடத்தில் மோடியின் பிரசாரக் கூட்டத்தை நடத்த மாவட்டத் தேர்தல் அதிகாரி திடீர் தடை விதித்தார்.

இந்நிலையில், வாராணசி தொகுதியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள ரோஹணியா நகரில் வியாழக்கிழமை பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது:
வாராணசியில் எனது பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பது, அம்மா-மகன் (சோனியா-ராகுல்) அரசு நடத்தும் நாடகமாகும்.
எனது பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு பாதுகாப்பு நலனை அவர்கள் காரணமாகக் கூறுகிறார்கள். வாராணாசியில் எனது கூட்டத்தை நடத்த ஒருவேளை பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தால் கூட, ஒரு நபருக்கு (மோடி) அம்மா-மகன் அரசால் பாதுகாப்பு தர முடியாதா?
உள்ளூர் நிர்வாகத்தினரும், தேர்தல் அதிகாரிகளும் வாராணசியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறுவதை நம்ப முடியாது. அங்கிருந்து 12 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த ரோஹணியா பகுதியில் அப்படி எந்த அச்சுறுத்தலையும் காண முடியவில்லை.
நாட்டுக்காக உயிர் துறக்கவும் நான் தயாராக இருப்பதால், எனது பாதுகாப்பு குறித்து அரசு கவலைப்படத் தேவையில்லை.
எனது பொதுக்கூட்டத்துக்கு அனுமதி தர மறுத்ததன் மூலம், நெருக்கடிக்கு கீழ்ப்படிந்து தேர்தல் ஆணையம் பாரபட்சமாகச் செயல்படுவது தெரிய வருகிறது.
இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் ஆத்ம பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அந்த அமைப்பு யாருடைய நெருக்கடிக்குப் பணிந்து செயல்படுகிறது என்பது எனக்குத் தெரியாது.
காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்க மக்கள் முடிவெடுத்து விட்டனர். அதனால் தேர்தல் ஆணையத்தால் அக்கட்சியை வெற்றி பெற வைக்க முடியாது.
பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது, எனது ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதலாகும். மற்ற வேட்பாளர்களுக்கு உரிய உரிமைகளை நான் பெறக் கூடாதா? கங்கைத் தாயை சந்திக்கவும் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
எனினும், கங்கை பூஜை மேற்கொள்வதற்காக நான் விரைவில் வாராணசி வருவேன். நான் கடந்த 14 ஆண்டுகளாக குறிவைக்கப்பட்டு வருகிறேன். சிபிஐ அமைப்பே என்னைத் துரத்தியது," என்றார் மோடி.
தேர்தல் ஆணையம் யாருக்கும் பணியாது என்று நேற்று தலைமை தேர்தல் அதிகாரி சம்பத் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications