நாட்டுக்காக குடும்பத்தையே கைவிட்டார்.. சொல்வது மோடி சகோதரர் தாமோதர்!!
அகமதாபாத்: நாட்டுக்கு சேவையாற்றவே தமது குடும்பத்தையே நரேந்திர மோடி கைவிட்டார் என்று அவரது சகோதரர் சோம்பாய் தாமோதர் விளக்கம் அளித்துள்ளார்.
குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி திருமணமானவர், அதை மறைத்து வருகிறார் என்று தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. மோடியும் சட்டசபை தேர்தல் வேட்புமனுக்களில் திருமணமானவர் என்பதை குறிப்பிடாமலே வந்தார்.
இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்துக்கும் போனது. அப்போது வேட்புமனுத் தாக்கலில் குறிப்பிட்டுள்ள அனைத்து படிவங்களையும் பூர்த்தி செய்யாதவர்களின் வேட்புமனுக்களை செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
இதனால் நேற்று வதோதரா லோக்சபா தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த போது வேறுவழியில்லாமல் தமக்கு திருமணமாகிவிட்டது. மனைவி பெயர் ஜஷோடபென் என்றும் அவர் ஓய்வு பெற்ற ஆசிரியை எனவும் மோடி வேட்புமனுவில் குறிப்பிட பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நரேந்திர மோடியின் சகோதரர் சோம்பாய் தாமோதர் இன்று மோடியின் திருமண வாழ்க்கை குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 45,50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஒடுக்கப்பட்ட ஏழை குடும்பம் நடத்தி வைத்த திருமணம் அது. எனது சகோதரர் நரேந்திர மோடி, நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் குடும்பத்தையே கைவிட்டார்.
மோடியின் திருமண வாழ்க்கையை முன்வைத்து யோசிக்காமல் தற்போதைய அவரது சேவையை கருத்தில் கொண்டு அவருக்கே வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications