அமைச்சர்கள் நியமனம்.. மோடியின் புரட்சிகரமான முடிவு.. !
டெல்லி நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பேஸ்புக் பக்கத்தில் மக்களுக்கு ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது.....
அமைச்சர்கள் நியமனத்தில் நரேந்திர மோடி புதிய வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். முதல் முறையாக, சிறிய அரசு.. அதிகபட்ச ஆளுமை என்ற புதிய கொள்கையை அவர் அறிமுகப்படுத்துகிறார். மேலும், பணியாற்றும் கலாச்சாரம் மற்றும் ஆட்சி நடைமுறையிலும் புதிய மாற்றத்தை அவர் கொண்டு வரவுள்ளார்.
அமைச்சர்களை குவிப்பதற்குப் பதில் சிறிய அளவிலான அமைச்சரவையை அவர் ஏற்படுத்துகிறார். இது பல்வேறு துறைகளுக்கிடையே ஒருங்கிணைந்து திறமையாக செயல்படஉதவும். மேலும் திறமையான நிர்வாகத்தைக் கொடுக்கவும் முடியும். பணியும் வேகமடையும்.
ஒரு கேபினட் அமைச்சர் தலைமையில் பல அமைச்சர்கள் செயல்படுவார்கள். இதனால் பல அமைச்சகங்களின் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு வேலைகள் சிறந்த முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய முடியும்.
மக்களிடம் அதிக அளவில் எதிர்பார்ப்புகள் இருப்பதை மோடி அறிவார். இதை மனதில் கொண்டே கடந்த நா்ன்கு நாட்களாக அமைச்சர்களை நியமிப்பது தொடர்பாக தீவிர ஆலோசனைகள், விவாதங்களில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கு முன்பு அரசியல் ஸ்திரமின்மை, சிறுபான்மை, கூட்டணி அரசுகள் இருந்து வந்த காரணத்தால் பல அமைச்சகங்கள் பிரிக்கப்பட்டு ஏராளமான அமைச்சர்களை நியமிக்கும் நிலை இருந்தது. தற்போது அந்த நிலை இல்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.