மோடியின் பிரதமர் கனவு பலிக்காது... மீண்டும் மத்தியில் காங். ஆட்சி அமைக்கும்: ஏ.கே.அந்தோணி
திருவனந்தபுரம்: மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். மோடியின் பிரதமர் கனவு பலிக்காது என தெரிவித்துள்ளார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியும் பாகிஸ்தான் ஏஜெண்ட்டுகள் எனக் குற்றம் சாட்டியிருந்தார் பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான மோடி.

அதற்குப் பதிலடி தரும் வகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.கே.அந்தோணி, மோடியின் பிரதமர் கனவு பலிக்காது. பிரதமர் பதவிக்கு போட்டியிடுபவர் போன்று மோடி பேசவில்லை என விமர்சித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் அவர் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதி. மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும். மோடி அலை வீசுகிறது என்று பாரதீய ஜனதா கட்சியினர் பிரசாரம் செய்து வருகிறார்கள். தற்போது அந்த அலையை காணவில்லை. அதே போல பாரதீய ஜனதாவும் இந்த தேர்தலில் காணாமல் போய்விடும். மோடியின் பிரதமர் கனவு பலிக்காது. மோடியின் ஆபத்தான சில கொள்கைகள் இந்தியாவை சின்னாபின்னாமாக்கி விடும் அபாயம் உள்ளது.
குஜராத்தில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளதாக கூறுகிறார்கள். அங்கு சென்று பார்த்தால் தான் அது எப்படிப்பட்ட மாற்றம் என்பது தெரிய வரும்' என்றார்.












Click it and Unblock the Notifications