சர்வதேச யோகா தின சர்ச்சை... துணை ஜனாதிபதி அன்சாரியை சமாதானம் செய்த பிரதமர் மோடியின் 'தூதர்'
டெல்லி: சர்வதேச யோகா தின நிகழ்ச்சிக்கு துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி அழைக்கப்படாததால் எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையை பிரதமர் மேற்கொண்டுள்ளார். இதற்காக துணை ஜனாதிபதி அன்சாரியை மத்திய அமைச்சர் நக்வி நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.
சர்வதேச யோகா தினம் கடந்த 21-ந் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. டெல்லி ராஜபாதையில் 40 ஆயிரம் பேர் பங்கேற்ற பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் போது பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. ராம் மாதவ் தமது ட்விட்டர் பக்கத்தில், துணை ஜனாதிபதி அன்சாரி, இந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்காதது குறித்து விமர்சனம் செய்திருந்தார். ஆனால் துணை ஜனாதிபதிக்கு அழைப்பே அனுப்பவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ராம் மாதவ், தமது தவறுக்கு மன்னிப்பு கோரி துணை ஜனாதிபதி தொடர்பான ட்விட் பதிவுகளை நீக்கியும்விட்டார். இருப்பினும் ராம் மாதவின் நடவடிக்கையால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. துணை ஜனாதிபதிக்கு யோகா நிகழ்ச்சிக்கு ஏன் அழைப்பு அனுப்பவில்லை என்ற கேள்வியும் எழுந்தது. துணை ஜனாதிபதி அன்சார்மி, முஸ்லிம் என்பதால் அழைப்பு அனுப்பவில்லையா என்ற கேள்வியும் எழுந்தது.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் நக்வி, துணை ஜனாதிபதி அன்சாரியை நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது அன்சாரிக்கு அழைப்பு அனுப்பாததற்கு புரோட்டோகால் பிரச்சனைதான் காரணம் என விளக்கம் அளிக்கப்பட்டது. அதாவது பிரதமர் தலைமை வகிக்கும் நிகழ்ச்சிக்கு ஜனாதிபதி அல்லது துணை ஜனாதிபதி அழைக்கப்படுவதில்லை; ஏனெனில் பிரதமருக்கு மேலான அரசியல் சாசன பதவி கொண்டவர்கள். இதனை கருத்தில் கொண்டுதான் அழைப்பு அனுப்பவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.