சக அமைச்சர்களின் ஊழல்களை கண்டுகொள்ளாத மன்மோகன்சிங்: சொல்வது பிரதமர் மோடி
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேர்மையானவராக இருந்தாலும் மற்றவர்கள் ஊழல் செய்ததை கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
"த ட்ரிபியூன்" ஆங்கில நாளிதழுக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார். அவரிடம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அக்கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காத மோடி, அரசாங்கத்தின் தலைமை பொறுப்பில் இருக்க கூடிய தான் மட்டும் நேர்மையானவராக இருந்தால் போதாது என்று கூறியுள்ளார்.

ஊழல் விவகாரத்தில் எவ்வித சமரசத்துக்கும் பிரதமராகிய தான் இடம் அளிப்பதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் மட்டுமே நேர்மையாக இருந்து கொண்டு மற்றவர்களை ஊழல் செய்ய அனுமதிப்பது சிறப்பான அரசுக்கு எடுத்துக்காட்டாக இருக்காது என்றும் மோடி கூறியுள்ளார்.
கருப்பு பணம் உருவாக காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு தற்போது கருப்பு பண விவகாரத்தில் மத்திய அரசை குறை சொல்ல எந்த உரிமையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்கும் வரை கருப்பு பணம் பதுக்கியுள்ளவர்களின் பெயர்கள் வெளியிடப்படாது என்றும் மோடி கூறியுள்ளார்.
ஒரே பதவி- ஒரே ஓய்வூதியம் தொடர்பாக ராணுவ உயர் அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசித்து வருவதாக அவர் கூறியுள்ளார். இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியுடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்பது தான் மத்திய அரசின் நிலைப்பாடு என்று மோடி கூறியுள்ளார். எனவே இந்த விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என்றும் எதிர்கட்சிகளை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications