அரசு அலுவலகத்தின் செக்ஷன் ஆபீஸர் போல பேசுகிறார் மோடி... அருண் ஷோரி "கொட்டு"
டெல்லி: பிரதமர் மோடி மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் துறை அலுவலர் போல செயல்பட்டு வருவதாக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஷோரி கடுமையாக விமரிசித்துள்ளார்.
வாஜ்பாய் தலைமையிலான முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த யாஷ்வந்த் சின்ஹா, சத்ருன்சின்ஹா உள்ளிட்டோர் பிரதமர் மோடிக்கு எதிராகவும், மத்திய அரசிற்கு எதிராகவும் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக.,வின் மற்றொரு மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஷோரி மோடியை கடுமையாக விமரிசித்துள்ளார். மோடி மத்திய அரசின் ஹோமியபதி துறையில் பகுதி அலுவலரோ, துறைத் தலைவரோ கிடையாது. அவர் இந்நாட்டின் பிரதமர். இதனை அவர் மறந்துவிட்டு பொறுப்பில்லாமல் இருக்கிறார்.
அவர் இந்நாட்டு மக்களுக்கு நன்னடத்தை, நல்ல நெறிகளைக் கற்றுக் கொடுத்து சிறந்த எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். ஆனால் மோடி அரசு முந்தைய மன்மோகன்சிங் அரசைக் காட்டிலும் பலவீனமான அரசாக மாறிவிட்டது.
பீகார் தேர்தல் முடிவை எதிர்நோக்கி காத்திருக்கும் மோடி தாத்ரி சம்பவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகிறார். இந்தியாவின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்காமல் பீகார் தேர்தலில் ஆர்வம் காட்டுகிறார்.
பா.ஜ. தேசிய தலைவரான அமித்ஷா பீகார் தேர்தல் வெற்றிக்காக ஜாதி அரசியல் நடத்துகிறார். மோடி மீது எனக்கு தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்ச்சி கிடையாது. அவர் தனது கடமையில் இருந்து தவறிவிட்டார் என்பதே எனது குற்றச்சாட்டு.
நாட்டில் நிலவும் அசாதாரண சூழநிலையை பார்க்கும்போது இந்தியா பாகிஸ்தான் போல மாறிவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. சகிப்புத்தன்மை குறித்து அவர் வாய்திறக்க மறுக்கிறார்.
இந்த ஆட்சியில் எழுத்தாளர்கள் கொல்லப்படுகின்றனர். இதற்கு எதிப்புத் தெரிவித்து பலர் தங்களது விருதுகளை திருப்பி அளிக்க முன்வந்தனர். இந்த ஆட்சி குறித்து விஞ்ஞானி பி,எம்.பார்கவா மற்றும் இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி ஆகியோர் தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்திருந்ததை அனைவரும் அறிவோம் என்று அருண் ஷோரி கூறினார்.












Click it and Unblock the Notifications