கேரளாவில் சூறாவளி காற்றுடன் கன மழை... பெண் உள்பட 5 பேர் பலி
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையொட்டி சூறாவளி காற்றுடன் பெய்து வரும் கன மழைக்கு பெண் உள்பட 5 பேர் பரிதாபமாகப் பலியாகினர்.
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டி வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழைக்கு இதுவரை பெண் உள்பட 5 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்புக்கு அதிகமாக பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, கேரளாவில் கடந்த 2 வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
குறிப்பாக மாநிலத்தின் மேற்கு பகுதிகளில் மழையின் தீவிரம் அதிகமாக இருந்தது. மழையுடன் சூறாவளி காற்றும் வீசியதால் பல இடங்களில் வீடுகள் இடிந்தும், மின்கம்பங்கள் சாய்ந்தும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

ஐவர் பலி
கனமழையால், திருவல்லாவைச் சேர்ந்த விஜயன், ஆலப்புழாவைச் சேர்ந்த ஸ்ரீஹரி , வெஞ்ஞாறுகோணத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமா , திருவனந்தபுரம் தம்பானூரைச் சேர்ந்த பாஸ்கரன், கரமனையைச் சேர்ந்த கவுரிபாய் ஆகியோர் இறந்துள்ளனர்.

தொடர் மழை
இந்த நிலையில் இன்றும், நாளையும் கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் மிகப் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கேரள வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதற்கேற்ப நேற்று முன்தினம் முதல் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
நேற்று அதிகபட்சமாக திருச்சூரில் 15 செ.மீ. மழை பதிவாகியது. மேலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை
கேரளாவில் இன்றும், நாளையும் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியது. இதனால் கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications