நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21-ல் தொடக்கம்- அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!
டெல்லி: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஜூலை 21-ந் தேதி முதல் ஆகஸ்ட் 18-ந் தேதி வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை நடத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த கூட்டத் தொடரில் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளன.
ஐ.பி.எல். நிதி மோசடியில் சிக்கியுள்ள லலித் மோடிக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா, ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ஆகியோர் உதவி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. இதனை பாரதிய ஜனதா கட்சி தலைவர்களும் சமாளித்து வருகின்றனர்.

இந்த இருவரும் பதவி விலகியாக வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் பிடிவாதமாக உள்ளது. இதேபோல் விவசாயிகள் தற்கொலை பிரச்சனையும் மத்திய அரசுக்கு தலைவலியாக உள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் இன்று கூடிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை ஜூலை 21-ந் தேதி முதல் ஆகஸ்ட் 18-ந் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத் தொடரை நடத்த முடிவு செய்துள்ளது.
இக்கூட்டத் தொடரில் நில ஆர்ஜித மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிக்கும். அதே நேரத்தில் லலித் மோடி விவகாரம், விவசாயிகள் பிரச்சனை, மியான்மர் தாக்குதல் உள்ளிட்டவை எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும். இதனால் வரும் கூட்டத் தொடரிலும் அனல் பறக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications