காத்திருக்கும் சிறைகள்.. தீர்ப்பை எதிர்நோக்கியிருக்கும் கனிமொழி, ராசா, மமதா, முலாயம், மாயாவதி!
டெல்லி/சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்குப் போயுள்ள நிலையில் நாடு முழுவதும் பல முக்கியத் தலைவர்களும் இதேபோல சிறை செல்லக் காத்திருக்கிறார்கள். இவர்கள் மீதும் கடுமையான புகார்கள் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ளன.
இதில் இவர்களும் தண்டிக்கப்பட்டால் கடுமையான விளைவுகளையும், பாதிப்புகளையும் சந்திக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டன என்பது நாடு முழுவதும் ஊழல் செய்த, ஊழல் செய்ய நினைக்கும் அரசியல்வாதிகள் அத்தனை பேருக்கும் நடு மண்டையில் நச்சென்று சுத்தியலால் அடித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
முன்பு போல இல்லை
இப்போதெல்லாம் முன்பு போல இல்லை. என்னதான் தண்டனை விதித்தாலும் அப்பீல் செய்து விட்டு, ஜாமீனில் வெளியே வந்து ஜாலியாக இருக்க முடியாது இனியும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் அந்த அளவுக்கு கடுமையாகி விட்டது.
2 ஆண்டுகளுக்கு மேல் சிறையா.. மவனே காலி!
2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை கிடைத்து விட்டால் போதும், சம்பந்தப்பட்ட நபரால் அடுத்த 6 ஆண்டுகளுக்கு சாதாரண வார்டு கவுன்சிலர் தேர்தலில் கூட போட்டியிட முடியாது. குறைந்தது எட்டு வருடம் தலை காட்டவே முடியாத நிலை ஏற்பட்டு விடும்.
லாலுவுக்கு கிடைத்த அடி
முன்னாள் பீகார் முதல்வரும், முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சரும், ராஷ்டிரிய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கும் அந்த கதிதான் ஏற்பட்டது. ஜெயலலிதாவைப் போலவே பல காலமாக இழுத்தடித்து வந்த மாட்டுத் தீவண ஊழலில் சிக்கி சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட லாலுவுக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்.பி பதவியும் அவருக்குப் பறி போய் விட்டது.
காத்திருக்கும் தலைவர்கள்
தற்போது ஜெயலலிதா, லாலு போல சிக்கலான வழக்குகளில் மாட்டியுள்ள சில முக்கியத் தலைவர்கள் தங்களுக்கான தீர்ப்புகளுக்காக காத்துள்ளனர்.
மாயாவதி - முலாயம்
உ.பி. அரசியல்வாதிகளான மாயாவதியும், முலாயம் சிங் யாதவும் கூட ஜெயலலிதாவைப் போல சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி தீர்ப்புக்கா காத்துள்ளனர். இவர்கள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மமதாவும்
அதேபோல மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த மகா ஊழலான சாரதா சிட்பண்ட் மோசடி விவகாரத்தில் திரினமூல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மமதா பானர்ஜிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் அரசுக்கும் இந்த ஊழலால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மகா பெரிய சிக்கலில் கனி - ராசா
தமிழகத்திலும் திமுக தலைவர் கனிமொழி, ராசா ஆகியோர் மீது இந்தியாவின் மிகப் பெரிய ஊழல் வழக்கு தொக்கி நிற்கிறது. அதுதான் 2ஜி வழக்கு. இந்த வழக்கில் இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைத்தால் இவர்களுக்கும் தேர்தலில் போட்டியிட தடை வந்து விடும். தற்போது வகித்து வரும் எம்.பி. பதவியும் பறி போய் விடும்.