டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் மீது வழக்கு பதிவு- கேஜ்ரிவால் மீது 6 வழக்குகள்!!
டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் மீது வழக்குகள் பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதுவும் முதல்வர் கேஜ்ரிவால் மீது மட்டும் 6 வழக்குகள் பதிவு செய்துள்ளது டெல்லி போலீஸ்.
டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் அதிகாரப் போட்டி தொடர்ந்து நிலவி வருகிறது. மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் ஆளுநர் தமக்கே அதிக அதிகாரம் என்கிறார்; இதற்கு மத்திய அரசும் ஆதரவாக இருக்கிறது.
ஆனால் ஆளுநரை மாநிலங்கள் நீக்கவும் வகை செய்யும் அரசியல் சாசன திருத்தம் வேண்டும் என்று டெல்லி சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. டெல்லி போலீஸ் உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் வருவதால் மாநில அரசுடன் முரண்பட்ட போக்கையே கடைபிடித்து வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் 21 பேர் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது 6 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடந்து வருகிறது.
அரசியல் தொடர்பான போராட்டம், தடையை மீறி ஆர்ப்பாட்டம், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது போன்றவை இதில் அடங்கும்.
மனோஜ் குமார் எம்.எல்.ஏ. மீது 4 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. ஏமாற்றுதல், பாதுகாப்பு படையினருடன் மோதல், பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டது போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர் மீது உள்ளன.
தடையை மீறி போராட்டம் நடத்தியதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி பட்டப்படிப்பு சான்றிதழ் கொடுத்த வழக்கில் முன்னாள் சட்ட அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமர் சிக்கி உள்ளார். அரசு ஊழியரை தாக்கியதாக ஜர்னைல் சிங் எம்.எல்.ஏ. மீது விசாரணை நடந்து வருகிறது.
தேர்தலின்போது மதுபானம் விநியோகித்ததாக நரேஷ் பாலியான் எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் தொல்லை கொடுத்ததாக மற்றொரு முன்னாள் சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி மீது அவருடைய மனைவி போலீசில் புகார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.