பணத்திற்காக கியூவில் நின்று இறந்தவர்களுக்கு இரங்கல்.. யெச்சூரி கோரிக்கையால் ராஜ்யசபாவில் அமளி
டெல்லி: வங்கியில் கியூவில் நின்று உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ராஜ்யசபாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்ததால் அமளி நிலவியது.
ரூபாய் நோட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தர்ணா நடத்தியதால் ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகல் இன்று புயலை கிளப்பின. ராஜ்யசபா கூடியதுமே, மார்க்சிஸ்ட் உறுப்பினர் சீதாராம் யெச்சூரி எழுந்து, "விவாதத்தை வேண்டுமானால் பிறகு வைத்துக்கொள்ளலாம். ஏடிஎம், வங்கி கியூவில் நின்று உயிரிழந்த பொதுமக்களுக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் முதலில் இரங்கல் தெரிவிக்க வேண்டும்" என்று அரசை வம்புக்கு இழுத்தார்.

ஆனால், அவை துணை தலைவர் குரியனோ, எதிர்க்கட்சிகள் விரும்பும் நேரத்தில் எல்லாம் இரங்கல் தீர்மானம் கொண்டுவர முடியாது என கண்டித்தார்.
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேசுகையில், எதிர்க்கட்சிகள் தினம் ஒரு பிரச்சினையை கிளப்பி, விவாதத்தை நடத்த விடாமல் செய்து வருகின்றன என்றார்.
இதையடுத்து பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சபாநாயகர் இருக்கையின் முன்பு நின்று தர்ணா நடத்தினர். இதையடுத்து, அவை 12 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது. இதன்பிறகு அவை கூடியபோதும், அமளி நிலவியதால் 12.34 மணிவரை அவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் தொடர்ந்து இதே விவகாரத்திற்காக அமளி நிலவியது. இதையடுத்து லோக்சபா மதியம் 2 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications