47 பேரை காவு வாங்கிய "வியாபம்" ஊழல்- சி.பி.ஐ. விசாரணைக்கு ம.பி. முதல்வர் சவுகான் பரிந்துரை!
போபால்: நாட்டை உலுக்கிவரும் 47 பேரை மர்மமான முறையில் பலி கொண்ட 'வியாபம்' அரசு தேர்வு வாரிய முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் பரிந்துரைத்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் தொழில்முறை தேர்வு வாரியமான வியாபம் மூலம் அரசு பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தேர்வுகளில் சிலர், லஞ்சம் கொடுத்து எளிதாக வேலைவாய்ப்பை பெற்று சென்றதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக மத்திய பிரதேச சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தி அரசியல் பிரமுகர்கள், முக்கிய புள்ளிகள் என பலரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
இந்நிலையில் வியாபம் ஊழல் வழக்கில் தொடர்புடையவர்களாக கருதப்படும் 47 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தனர். மேலும் வியாபம் முறைகேட்டில் மத்திய பிரதேச முதல்வரான பாரதிய ஜனதாவின் சிவராஜ் சிங் சவுகானுக்கும் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு வலுத்து வருகிறது.
இதனிடையே வியாபம் முறைகேடு சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிடவேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் வலியுறுத்தியிருந்தார். அதை மாநில அரசு நிராகரித்தது.
இதைத்தொடர்ந்து வியாபம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதே நேரத்தில் வியாபம் முறைகேடு வழக்கில், உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணை தேவை என கருதினால் மத்திய பிரதேச அரசு அத்தகைய விசாரணைக்கு உத்தரவிடும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருந்தார்.
இந்த நிலையில் உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணை கோரி திக்விஜய்சிங் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரணைக்கு ஏற்றது. இம்மனு மீது நாளை மறுநாள் விசாரணை நடைபெறும் எனவும் தெரிவித்திருக்கிறது.
இச்செய்தி வெளியான உடனேயே மத்திய பிரதேச முதல்வர் சவுகான், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில உயர்நீதிமன்றம் பரிந்துரைக்க கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications