ம.பி. கேபினட் விரிவாக்கம்- 28 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு- ஜோதிராதித்யா சிந்தியா கை ஓங்கியது
போபால்: மத்திய பிரதேசத்தில்ல் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. 28 பேர் புதிய அமைச்சர்களாக இன்று பதவியேற்றனர்.
மத்திய பிரதேசத்தில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்க்க தொடக்கம் முதலே பாஜக முயன்றது.

மீண்டும் பாஜக ஆட்சி
ஒருகட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா, கமல்நாத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். சிந்தியாவின் 22 ஆதரவு எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் கமல்நாத் அரசு கவிழ்ந்தது. மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தது.

ம.பி. அமைச்சரவை விரிவாக்கம்
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தொடங்கிய நிலையில் மத்திய பிரதேசத்தில் 3 மாதங்களுக்கு முன்னர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது. அப்போது 5 பேர் மட்டுமே அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இந்த நிலையில் இன்று சிவராஜ்சிங் சவுகானின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அனைவருக்கும் ஆளுநர் ஆனந்திபென் புதிய அமைச்சர்களுக்குப் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

12 பேர் சிந்தியா ஆதரவாளர்கள்
இன்று மொத்தம் 28 பேர் புதிய அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர். இவர்களில் 12 பேர் ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவாளர்கள். கமல்நாத் அரசை கவிழ்க்க எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தவர்கள். இந்த 12 பேரும் இடைத் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் வெல்ல வேண்டும். இதனை முன்வைத்து காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனங்களை வெளியிட்டு வருகிறது.

கமல்நாத் விமர்சனம்
அமைச்சரவை விரிவாக்கம் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் கமல்நாத், தற்போதைய அமைச்சர்களில் 14 பேர் எம்.எல்.ஏ.வாகவே இல்லாதவர்கள். இது ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் செயல். மக்களிடையே இந்த அமைச்சரவை மாற்றம் பெரும் கேலிக்கூத்தாக தெரிகிறது என சாடியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications