திருமணமாகவில்லை... ‘சூனியம்’ பயம்.. மந்திரவாதி ஆலோசனைப்படி சாவி, வயரை விழுங்கிய நபர்!
திருமண ஆசையில் மந்திரவாதியின் ஆலோசனைப்படி சாவி, வயரை விழுங்கிய நபர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
Recommended Video
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் திருமணமாகாத விரக்தியில், மந்திரவாதியின் ஆலோசனைப்படி, சாவி, வயர், செல்போன் போன்றவற்றை விழுங்கிய நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோய் அருகிலுள்ள பில்கிராம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜய் திவிவேதி. 42 வயதான அஜய்க்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவரது திருமணம் தள்ளிக்கொண்டே சென்றுள்ளது.
தனக்கு யாரோ சூனியம் வைத்திருப்பார்களோ என்ற சந்தேகம் இதனால் அஜய்க்கு ஏற்பட்டது. இது தொடர்பாக மந்திரவாதி ஒருவரை அவர் சந்தித்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட அந்த மந்திரவாதி, அஜயிடம் காசு பறிக்க திட்டமிட்டுள்ளார்.
எனவே, தான் சொல்வதை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என அஜய்க்கு அவர் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை உண்மையென நம்பிய அஜய், மந்திரவாதியின் அறிவுரைப்படி சாவி, கண்ணாடித் துண்டுகள், வயர், பேட்டரி, செல்போன் போன் பாகங்கள் என கையில் கிடைத்ததை எல்லாம் சாப்பிட்டு வந்துள்ளார்.
இதனால் அவர் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. தீரா வயிற்றுவலி ஏற்பட்டதால், மருத்துவரிடம் சிகிச்சைக்காகச் சென்றார் அஜய். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துள்ளனர். அதில், அவரது வயிற்றிற்குள் சாவி, கண்ணாடித் துண்டுகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து உடனடியாக அஜய்க்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவரது வயிற்றில் இருந்த பொருட்கள் அகற்றப்பட்டன. தொடர்ந்து மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
'திருமணமாக வேண்டும் என்ற ஆசையில், மந்திரவாதி கூறியதை எல்லாம் சாப்பிட்டேன்" என மருத்துவர்களிடம் கூறியுள்ளார் அஜய்.