மத்தியப்பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்து.. பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!
போபால்: இருமல் மருந்து குடித்து பலியான குழந்தைகளின் எண்ணிக்கை மத்தியப்பிரதேசத்தில் 14ஆக அதிகரித்துள்ளது. சர்ச்சைக்குரிய இருமல் மருந்தை பரிந்துரைத்ததாக அரசு மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்தியப்பிரதேசத்தில் இருமல் மருந்து கொடுக்கப்பட்ட 11 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசேன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம்தான் இந்த மருந்தை தயாரித்திருந்தது. இந்நிலையில், இந்த மருந்தை பயன்படுத்திய மேலும் 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் இது குறித்து கூறுகையில், "மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள். எங்கள் குழந்தை பிரகாஷ் யதுவன்ஷிக்கு டயாலிசிஸ் சிகிச்சை செய்ய இருந்தோம். அரசு மருத்துவமனையில் போதுமான சிகிச்சை கிடைக்காததால், தனியார் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்திருந்தோம். ஆனால் எங்கள் குழந்தை தற்போது உயிருடன் இல்லை. உயிரிழப்புக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளனர்.
சர்ச்சைக்குரிய இருமல் மருந்தில் டையெத்திலீன் கிளைக்கால் (48.6% w/v) என்ற நச்சுப்பொருள் கலக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. எனவே அடுத்த அறிவிப்பு வரும் வரை 'கோல்ட்ரிஃப் சிரப்' எனும் இருமல் மருந்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications