நாடாளுமன்றத்தில் 5ம் நம்பர் அலுவலக அறை யாருக்கு? தெலுங்கு தேசம்-திரினமுல் எம்.பிக்கள் கை கலப்பு
டெல்லி: நாடாளுமன்றத்தில் ஒதுக்கப்பட்ட அறைக்காக திரினமுல் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கள் கைகலப்பில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் ஒவ்வொரு கட்சியினருக்கும் அலுவலகம் ஒதுக்கப்படும். இங்குதான் அந்தந்த கட்சி எம்.பிக்கள் கூட்டம் நடத்தி ஆலோசனைகள் செய்து கொள்ளுவார்கள்.
ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சிக்கு 5வது எண் அறை ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த அறையை திரினமுல் காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியினருக்கு 3வது மாடியில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தெலுங்கு தேசம் கட்சியினர் தங்கள் அலுவலகத்தை காலி செய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

ஆத்திரமடைந்த திரினமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் 5ம் எண் அறைக்குள் வலுக்கட்டாயமாக புகுந்து கொண்டதுடன், அறைக்கு வெளியே மாட்டியிருந்த தெலுங்கு தேசம் கட்சி பெயர் பலகையையும் பிடுங்கி எறிந்தனர். இதனால் ஆத்திரமடைந்த தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது லேசான கைகலப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே தெலுங்கு தேசம் கட்சியினர் தங்களது பெயர் பலகையை மீண்டும் எடுத்து மாட்டி வைத்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியினர் அலுவலக அறையை காலி செய்யவில்லை என்றால் அதுகுறித்து சபாநாயகர் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அதைவிடுத்து தகராறு செய்தது திரினமுல் காங்கிரசாரின் தவறு என்கின்றனர் நாடாளுமன்றவாதிகள்.












Click it and Unblock the Notifications