லோக்சபா தேர்தல்: "முகேஷ் அம்பானிக்கு பாஜக, காங் ஆதரவு" முக்கிய பிரச்சனையாக உருவெடுக்கிறது?
டெல்லி: முகேஷ் அம்பானியை காங்கிரஸும் பாஜகவும் கை கோர்த்து ஆதரித்து வருவது லோக்சபா தேர்தலில் முதன்மை பிரச்சனையாக உருவெடுக்கக் கூடும் எனத் தெரிகிறது.
டெல்லி மாநில சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்படவிருந்த ஜன் லோக்பால் மசோதா, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது.

இம்மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனால் பதவி விலகப்போவதாக ஏற்கனவே கேஜ்ரிவால் தெரிவித்திருந்தார். அதன்படி மசோதா நிறைவேற்ற முடியாமல் போனதால் நேற்று இரவு தனது அமைச்சரவையை கூட்டி பதவி விலகுவது என்ற முடிவை அவர் எடுத்தார்.
பின்னர் தொண்டர்கள் முன் உரையாற்றிய கேஜ்ரிவால், முகேஷ் அம்பானியை காப்பாற்றுவதற்காகவே காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுத்துவிட்டதாக கடுமையாக சாடினார்.
மேலும் காங்கிரஸ் கட்சியானது தனது கடை என்றும் அந்த கடையில் எதை வேண்டுமானாலும் தன்னால் பெற்றுக்கொள்ளமுடியும் என்று முன்னொரு சமயம் அம்பானி கூறியதை மேற்கோள் காட்டிய அவர் கடந்த 10 வருடங்களை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை அம்பானி தான் இயக்கி வருவதாக கூறினார்.
அதே சமயத்தில் மோடியை பின்னால் இருந்து இயக்குவதே முகேஷ் அம்பானிதான் என்றும் அப்படியில்லையென்றால் மோடிக்கு ஏராளமான பணம் எங்கிருந்து கிடைக்கிறது எனவும் கேள்வி எழுப்பினார்.
1970களில் இந்திரா காந்தி, எதிர்க்கட்சிகள் அனைத்தும் தொழிலதிபர்களின் தரகர்களாக செயல்படுகின்றன என்று சாடியிருந்தார். அதை நினைவூட்டுவது போலவே கேஜ்ரிவாலின் "முகேஷ் அம்பானியும் பாஜக- காங்கிரஸ்" பேச்சும் தேர்தல் முழக்கமாக உருவெடுக்க கூடும் போல் தெரிகிறது.
நிச்சயமாக லோக்சபா தேர்தலில் மூன்றாவது அணி மற்றும் ஆம் ஆத்மியால் முகேஷ் அம்பானி மற்றும் பாஜக- காங்கிரஸ் உறவு விவகாரம் சூறாவளியாக உருவெடுக்கும் என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications