முட்டி மோதிய லாலு! சுமூகமாக முடித்து வைத்து நிதிஷை முதல்வர் வேட்பாளராக்கிய முலாயம்!!
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம்- ஐக்கிய ஜனதா தளம் இடையேயான கூட்டணி முறிந்து போகும் நிலையில் தலையிட்ட சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் சுமூகமாக நிதிஷ்குமாரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவும் செய்துவிட்டார்.
பீகார் மாநிலத்தில் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பீகாரில் கடந்த சில ஆண்டுகளாகவே எதிரும், புதிருமாக அரசியல் நடத்தி வந்த ராஷ்டிரிய ஜனதாதளத் தலைவர் லாலு பிரசாத்தும், முதல்வர் நிதிஷ்குமாரும் சட்டசபைத் தேர்தலில் கூட்டணி போட்டி அமைத்து போட்டியிட முடிவு செய்தனர்.
லோக்சபா தேர்தலில் பீகாரில் பாரதிய ஜனதா பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றியதால் சட்டசபை தேர்தலில் இதேபோல் ஆகி விடக்கூடாது என்பதற்காக இருவரும் கை கோர்த்தனர்.
ஆனால் யார் முதல்வர் வேட்பாளர் என்பதில் லாலு - நிதிஷ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதற்கு தீர்வு காண சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் முன்வந்தார்.
இதைத்தொடர்ந்து டெல்லியில் நேற்று அவருடைய தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் லாலுபிரசாத், ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் நிதிஷ்குமாரை முதல்வர் வேட்பாளரால லாலு பிரசாத் ஏற்றுக் கொண்டார். இது குறித்து செய்தியாளர்களிடம் முலாயம்சிங் கூறியதாவது:
லாலு பிரசாத்தும், நிதிஷ்குமாரும் ஒன்றுசேர்ந்து இருப்பதற்காக மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பீகார் சட்டசபை தேர்தலில் ஜனதாதள கட்சிகளின் சார்பில் முதல்வர் வேட்பாளராக நிதிஷ்குமார் போட்டியிடுவார்.
அவருடைய பெயரை ஆலோசனைக் கூட்டத்தில் லாலுபிரசாத் முன்மொழிந்தார். நிதிஷ்குமாருக்கு ஆதரவாக லாலு பிரசாத் பீகாரில் தேர்தல் பிரசாரமும் மேற்கொள்வார்
கூட்டணி அமைத்து போட்டியிடுவதில் எந்த கருத்துவேறுபாடும் எழுவதை அனுமதிக்க முடியாது. இவர்கள் இருவரும் பீகாரில் வகுப்புவாத சக்திகளை விரட்டியடிக்க ஒருங்கிணைந்து போராடுவார்கள்
இவ்வாறு முலாயம்சிங் கூறினார்.