முல்லைப் பெரியாறு: அதிகாரிகளை கேரளா தடுப்பதற்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
டெல்லி: முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிட செல்லும் அதிகாரிகளை கேரளா தடுப்பதற்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரை தேக்கி வைப்பது தொடர்பாக தமிழகம்-கேரளா இடையே பிரச்சனை இருந்து வருகிறது.
இது தொடர்பாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கை கொடுத்தது. அதன் பேரில் முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளதாகவும் எனவே அணையில் 142 அடி உயரம் வரை தண்ணீரை தேக்கி வைக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கேரளா மனு தள்ளுபடி
கேரள மாநில அரசு அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது. அது தள்ளுபடி செய்யப்பட்டது.

கேரளா தாக்குதல்
இதையடுத்து முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியது. ஆனால் கேரள போலீசார் தமிழக அதிகாரிகளை தடுத்ததோடு தாக்கவும் முயன்றனர்.

மத்திய படை கோரிக்கை
இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு மத்தியப்படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதற்கு கேரள மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்தது.

கேரளா போலீஸ் போதுமே..
அந்த மனுவில், முல்லைப் பெரியாறு அணைக்கு மத்தியப்படை பாதுகாப்பு தேவை இல்லை. கேரள போலீஸ் உரிய பாதுகாப்பு வழங்கும் என்று கூறி இருந்தது.

தமிழக அரசு புது மனு
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று புதிய பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில் கூறி இருப்பதாவது:

தடுக்க கூடாது
முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்கு தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் எந்தவித தடையும், இடையூறும் இல்லாமல் சென்று வர அனுமதிக்க வேண்டும். அணைக்கு செல்லும் தமிழக அதிகாரிகளை தடுக்கக் கூடாது என்று கேரள மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

தடை விதிக்க வேண்டும்
சோதனை என்ற பெயரில் தமிழக அதிகாரிகளிடம் கேரள போலீசார் அத்துமீறி நடந்து கொள்கிறார்கள். எனவே அதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு தமிழக அரசின் புதிய மனுவில் கூறப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications