மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் கட்டணம் விமான கட்டணத்தைவிட குறைவு: அமைச்சர் தகவல்
மும்பை: மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பை முதல் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகர் வரையிலான அதிவேக புல்லட் ரயிலின் டிக்கெட் கட்டணம் விமான கட்டணத்தை விட குறைவாக இருக்கப்போகிறது என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
லோக்சபா கேள்வி நேரத்தின்போது இதுகுறித்து அவர் கூறியது: 508 கி.மீ தொலைவு கொண்ட மும்பை-அகமதாபாத் தூரத்தை புல்லட் ரயில் 2 மணி நேரங்களில் கடந்துவிடும். அதிகபட்சமாக 350 கி.மீ வேகத்தில் ரயில் பயணிக்க முடியும் என்றாலும், 320 கி.மீ வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது 7 மணி நேரம்
தற்போதைய நிலையில் இவ்விரு நகரங்களையும் இணைக்கும் அதிவேக ரயில் தூரந்தோ எக்ஸ்பிரஸ். இது 7 மணி நேரத்தில் இந்த தூரத்தை கடக்கிறது.

7 வருடங்களில் நிறைவு
இந்த ரயில் திட்டத்திற்கு ரூ.97636 கோடி செலவாகும். இரு நகரங்களும் வர்த்தக ரீதியில் முக்கியமானவை என்பதால் புல்லட் ரயில் திட்டம் அவசியமாகிறது. 2023-24ம் ஆண்டுக்குள் புல்லட் ரயில் திட்டம் நிறைவடையும் என எதிர்பார்க்கிறோம். விமான கட்டணத்தைவிட இந்த ரயில் கட்டண் குறைவாக இருக்கும்.

சென்னை-மும்பை வழித்தடம் ஆய்வு
மும்பை-சென்னை, மும்பை-நாக்பூர், டெல்லி-கொல்கத்தா வழித்தடங்களில் இதுபோன்ற புல்லட் ரயில் பாதைகளை அமைப்பது பற்றி ஆய்வு நடத்தப்படும்.

சென்னை-பெங்களூர் நடுவே செமி புல்லட்
டெல்லி-சண்டீகர், சென்னை-பெங்களூர்-மைசூர், டெல்லி-கான்பூர், நாக்பூர்-பிலாஸ்பூர், மும்பை-கோவா, மும்பை-அகமதாபாத், சென்னை-ஹைதராபாத், நாக்பூர்-செகந்திராபாத் நகரங்கள் நடுவே செமி-புல்லட் ரயில் இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications