பார்திவ் படேல் அதிரடி..பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் !
மொஹாலி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மொஹாலியில் நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு துவக்கமே அதிர்ச்சியாக கேப்டன் ரோகித் சர்மா 2 பந்தில் டக் அவுட் ஆனார். பின்னர் இணைந்த பார்திவ் பட்டேல், அம்பத்தி ராயுடு ஜோடி சிறப்பான ரன் குவிப்பில் ஈடுட்டனர்.
அதிரடியில் இறங்கிய இந்த ஜோடி சிக்ஸரையும், பவுண்டரியையும் பறக்கவிட்டது. இதனால் முதல் 10 ஓவர்களில் 77 ரன்களை எட்டியது மும்பை. இதனிடையே 37 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்த நிலையில் அம்பத்தி ராயுடு அவுட் ஆனார். ராயுடு-பார்த்திவ் படேல் ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 14.1 ஓவர்களில் 137 ரன்கள் குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய ஜோஸ் பட்லர் 13 பந்துகளில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் சேர்த்து மோஹித் சர்மா பந்துவீச்சில் போல்டானார். இதன் பின்னர் போலார்ட் களமிறங்க, ஜான்சன் வீசிய 19-வது ஓவரில் பார்த்திவ் படேல் ஆட்டமிழந்தார். அவர் 58 பந்துகளில் 2 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் குவித்தார். மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது.
பஞ்சாப் தரப்பில் மோஹித் சர்மா 4 ஓவர்களில் 38 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். மும்பையை தொடர்ந்து கடின இலக்கை விரட்டிய பஞ்சாபுக்கு முரளி விஜய் 19 ரன்னும், வோரா 7 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். மார்ஷ் 45 ரன்கள் சேர்த்தார்.
மேக்ஸ்வெல் 56 ரன்கள் சேர்த்தபோதும் அடுத்து வந்த வீரர்களால் ரன் குவிக்க முடியவில்லை. இதனால் பஞ்சாப் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 164 ரன்கள் மட்டும் எடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.