நெத்தியில் துப்பாக்கியை வச்சுக் கேட்டாலும் அஞ்சாமல் சொல்வேன்.. அறிவியல்தான் என் மதம் என்று!
மும்பை: மும்பையைச் சேர்ந்த துறவி ஒருவர் பெரிய சாதனை படைத்துள்ளார். மதவாதியாக இருந்தாலும் கூட அவர் கணிதத்தில் (ஜியாமெட்ரியில்) அபார சேவையாற்றி அதற்காக ரூ. 65 லட்சம் பரிசையும் பெற்று அசத்தியுள்ளார். அதை விட முக்கியமானது, தனது மதம் அறிவியல் என்று அவர் கூறியிருப்பது.
இவர் பேராசிரியர் மகன் மஹராஜ். துறவி ஆவார். ஆனால் ஆன்மீகவாதி மட்டுமல்ல, அறிவியல்வாதியாகவும் திகழ்கிறார்.

பெரும் மதிப்புக்குரிய இந்திய கணிதப் பேராசிரியர்களில் இவரும் ஒருவர் ஆவார். மும்பையில் உள்ள டாடா அடிப்படை ஆய்வுக் கழகத்தில் ஆய்வாளராக சமீபத்தில் இவர் நியமிக்கப்பட்டார். தற்போது இன்போசிஸ் நிறுவனம் கணிதத்திற்காக வழங்கும் பரிசை இவர் பெற்றுள்ளார்.
ஜியாமெட்ரி பிரிவில் இவர் ஆற்றியுள்ள சேவைக்காக இந்த விருது அளிக்கப்படுகிறது. இதுகுறித்து மஹராஜ் கூறுகையில், பள்ளியில் நான் படித்தபோது என்னை மிகவும் கவர்ந்தது இந்த ஜியாமெட்ரிதான். அப்போதிருந்தே ஜியாமெட்ரி என்றால் எனக்கு உயிராகி விட்டது என்றார்.
47 வயதான மஹராஜ் கடந்த 1998ம் ஆண்டு ராமகிருஷ்ணா மடத்தில் இணைந்து துறவியானார். அப்போது அவர் கலிபோர்னியாவில் பிஎச்டி செய்து கொண்டிருந்தார்.
மத நம்பிக்கையோடு அறிவியல் மீதும் அபார நம்பிக்கை கொண்டவர் மஹராஜ். இது முரண்பாடாக உள்ளதே என்று கேட்டால் நிச்சயம் இல்லை. என்னைப் பொறுத்தவரை நம்பிக்கையை விட நம்பகத்தின் மீதுதான் அதிக நம்பிக்கை கொண்டவன். எனவே எனக்கு எதுவுமே முரண்பாடாக தெரியவில்லை என்கிறார்.
2011ம் ஆண்டு இவர் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் அறிவியல் விருதையும் வென்றுள்ளார். இவர் தான் போட்டிருக்கும் காவி உடை குறித்துக் கூறுகையில், இது ஒரு அடையாளம்தானே தவிர இதற்கும், மதத்திற்கும் சற்றும் சம்பந்தம் இல்லை என்கிறார்.
இதுகுறித்து மஹராஜ் கூறுகையில் நான் எந்த மதத்தையும் பின்பற்றவில்லை. என் தலையில் துப்பாக்கியை வைத்துக் கேட்டால், பயப்படாமல், அஞ்சாமல் எனது மதம் அறிவியல் என்று தைரியமாக கூறுவேன்.
எனக்கு அரசியலிலும் ஈடுபாடு இல்லை. அறிவியலும் அரசியல் சாராதது. எனவே நான் அரசியல்வாதியும் கிடையாது, மதவாதியும் கிடையாது, ,அறிவியல் வாதி என்று தெளிவாகப் பேசுகிறார் மஹராஜ்.












Click it and Unblock the Notifications