28ம் தேதிக்குள் மும்பையை தீவிரவாதிகள் தாக்கக்கூடும்: உளவுத் துறை எச்சரிக்கை
மும்பை: வரும் 28ம் தேதிக்குள் மும்பையில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆதரவுடன் இயங்கி வரும் ஜமாத்துத் துவா, லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகள் வரும் 28ம் தேதிக்குள் தாக்குதல் நடத்த 4 குழுக்களை ஏற்கனவே இந்தியாவுக்கு அனுப்பிவிட்டன என்று உளவுத் துறை மகாராஷ்டிரா மாநில போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளது. அந்த 4 குழுக்கள் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் ஒடிஷாவுக்கு சென்றுள்ளன.
மகாராஷ்டிராவுக்கு வந்துள்ள குழு மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோவிலை குறி வைத்துள்ளது. கோவிலில் கூட்டம் அதிகம் உள்ளபோது தாக்குதல் நடத்த அந்த குழு திட்டமிட்டுள்ளது. இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமையில் நடத்தப்படக்கூடும் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளது.
மும்பையில் தாக்குதல் நடத்த வந்துள்ள குழுவுக்கு அப்துல்லா அல் குரைஷி என்பவர் தலைமை வகித்துள்ளார். அவருக்கு நசீர் அலி, ஜாபீத் இக்பால், மொபித் ஜீமன், ஷம்ஷேர் ஆகியோர் துணை புரிகிறார்கள். அவர்கள் அனைவரும் 25 வயதுடையவர்கள் என்று உளவுத் துறை தெரிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கையை அடுத்து மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.