மும்பையில் இன்றும் கன மழை நீடிக்கும்.. வீடுகளில் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
மும்பையில் இன்றும் கனமழை நீடிக்கும்; மக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மும்பை: கனமழை இன்றும் தொடரும் என்பதால் மும்பைவாசிகள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மும்பையில் செவ்வாய்கிழமையன்று கனமழை கொட்டி தீர்த்தது. ஒரே நாளில் 200 மி.மீ மழை கொட்டியது.இது வழக்கமாக பெய்யும் மழை அளவை விட 9 மடங்கு அதிகமாகும்.
மும்பையில் புதன்கிழமையும் கனமழை கொட்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை தொடரும்..
இது தொடர்பாக ட்விட்டரில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், கனமழை நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். கனமழையால் விமானம் மற்றும் ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

வெள்ளத்தில் மிதக்கும் மும்பை
கடந்த 2005-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பின்னர் மும்பையை புரட்டிப் போட்டது கனமழை. மும்பை மாநகரமே வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. மும்பைவாசிகள் கார்களை வெள்ளத்தில் விட்டுவிட்டு வீடு திரும்பினர்.

ரிலையன்ஸ் அலுவலகம்
மும்பை கிங் எட்வார்ட் நினைவு மருத்துவமனை, ரிலையன்ஸ் தலைமை அலுவலகம் உள்ளிட்டவை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் தலைமை அலுவலகத்துக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது.

பேரிடர் மீட்பு குழு
மேலும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மாநில பேரிடர் மீட்பு கட்டுப்பாட்டு அறையை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பார்வையிட்டார்.

மத்திய அரசு உறுதி
இதனிடையே பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் முதல்வர் தேவேந்திர பட்னவிஸை தொடர்பு கொண்டு நிலைமைகளை கேட்டறிந்தனர். மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications