ஜனாதிபதி பதவிக்கு முரளி மனோகர் ஜோஷி மும்முர 'லாபி'... ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் சந்திப்பு!
டெல்லி: நாட்டின் அடுத்த ஜனாதிபதி பதவிக்கு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி தீவிரமாக முயற்சித்து வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்று பிரதமராக மோடி பதவியேற்ற நிலையில் பாஜகவின் மூத்த தலைவர்களான அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, ஜஸ்வந்த்சிங் உள்ளிட்டோர் முழுவதுமாக ஓரம்கட்டப்பட்டனர். பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் வசம் பாஜக போனது.

அப்போது 2017-ம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலில் அத்வானி, முரளிமனோகர் ஜோஷிக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என கூறப்பட்டது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக அத்வானி, முரளிமனோகர் ஜோஷி முழுவதுமாக ஒதுக்கிவைப்பட்டனர். மத்திய அரசை வெளிப்படையாக பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வழிநடத்தி வருகிறது.
இந்த நிலையில் தற்போது ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வியூகங்களை அரசியல் கட்சிகள் முன்னெடுக்கத் தொடங்கியுள்ளன. இதில் முதல் கட்டமாக நாடாளுமன்றத்தில் 50 எம்.பி.க்கள் மற்றும் தமிழக சட்டசபையில் 133 எம்.எல்.ஏக்களை கொண்டிருக்கும் அதிமுகவை கூட்டணியில் சேர்க்க பாஜக முயற்சித்து வருகிறது.
அதே நேரத்தில் ஓரம்கட்டப்பட்ட முரளி மனோகர் ஜோஷியும் தீவிர லாபியில் இறங்கியுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் பிரதம மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட மூத்த பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை முரளி மனோகர் ஜோஷி சந்தித்து பேசியிருக்கிறார். நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தையும் நேரில் அவர் சந்தித்து பேசியிருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்களில் ஒருவரான தேவேந்தர ஸ்வரூப், முரளி மனோகர் ஜோஷிக்கு வெளிப்படையாகவே ஆதரவை தெரிவித்திருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். நிறுவனரான தீனதயாள் உபாத்யாவின் கொள்கை பரம்பரையில் வந்தவர் முரளி மனோகர் ஜோஷி எனவும் அவர் புகழாரம் சூட்டியிருந்தார். இருப்பினும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவரையே ஜனாதிபதியாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்றே பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறும் உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் பாஜக இதில் தீவிரம் காட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications