முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல; பார்சிஸ்கள் தான்: நஜ்மா ஹெப்துல்லா
டெல்லி: நாட்டில் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல; பார்சிகள்தான் சிறுபான்மையினர் என்றும் இடஒதுக்கீடு மட்டுமே முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்க முடியாது என்றும் மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி:

'புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு அனைத்து சமுதாய முன்னெற்றத்திற்காகவும் பாடுபடும். குறிப்பாக சிறுபான்மையினரின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இது சிறுபான்மையினர் அனைவருக்கான அமைச்சகம். 2001 ஆம் ஆண்டின் சென்சஸ் கணக்கின்படி, இந்தியாவில் 138 மில்லியன் முஸ்லிம்கள் உள்ளனர். அதாவது 13.4 விழுக்காடு. எனவே முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல. உண்மையில், பார்சிஸ்கள் தான் சிறுபான்மையினர். ஏனென்றால் அவர்களது எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. அவர்கள் சமுதாயம் அழிந்துவிடாமல் பாதுகாக்க அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது.
நாங்கள் முஸ்லிம்களுக்கு ஒருபோதும் இடஒதுக்கீடு வாக்குறுதி கொடுத்தது கிடையாது. காங்கிரஸ் தான் அவ்வாறு செய்தது. இடஒதுக்கீடு மட்டுமே முஸ்லிம்களின் வாழ்வை முன்னேற்ற வழி அமைக்கும் ஒரு தீர்வாகிவிட முடியாது. அது ஒரு சாக்கு போக்கு அவ்வளவுதான்.
ஆனால், நாங்கள் அரசியலமைப்பு சட்டத்தின் வழியாக ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்துவதில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். அது மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு செய்யப்படுவதை பற்றியது அல்ல. அதை அனுமதிக்கவும் செய்யாது. நாங்கள் அனைவருக்காகவும் பாடுபட தயாராக இருக்கிறோம்.
புதிய அரசு சச்சார் கமிட்டியின் அனைத்து பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. கல்வி மூலமாக வளர்ச்சியை கொண்டுவர வேண்டுமே தவிர சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களை வளர்ப்பது கூடாது
இவ்வாறு நம்ஜா ஹெப்துல்லா கூறினார்.












Click it and Unblock the Notifications