ஸ்லோகம் சொல்வதற்குப் பதில் அல்லா என்று சொல்லலாமே... முஸ்லீம்களுக்கு அமைச்சர் தரும் யோசனை
டெல்லி: சர்வதேச யோகா தினத்தன்று யோகா செய்யும்போது ஸ்லோகம் சொல்வதற்குப் பதில் முஸ்லீம்கள், அல்லா என்ற வார்த்தையை பயன்படுத்தலாம் என்று மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபாத நாயக் ஆலோசனை கூறியுள்ளார்.
ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினத்தை மத்திய அரசு கொண்டாடுகிறது. இதற்காக டெல்லி ராஜ்பாத்தில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் நாடு முழுவதும் யோகா நிகழ்ச்சிகளை நடத்தவும் அது உத்தரவிட்டுள்ளது.
இதற்கு முஸ்லீ்ம்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக சூரிய நமஸ்காரம் செய்வதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து அந்த சூரிய நமஸ்காரம் ரத்து செய்யப்படடுள்ளது. இந்த நிலையில் முஸ்லீம்கள், யோகா செய்யும்போது ஸ்லோகம் சொல்வதற்குப் பதில் அல்லாவின் பெயரைச் சொல்லலாம் என்று மத்திய அமைச்சர் ஸ்ரீபாதநாயக் யோசனை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், யோகாவை எதிர்ப்பவர்கள மனிதகுலத்தின் எதிரிகள். யோகாவுக்கும், மதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சர்ச்சை வந்தது என்பதால் நாங்கள் சூரிய நமஸ்காரத்தை எடுத்து விட்டோம். மேலும் அது செய்வதற்குக் கடினமானதும் கூட. ஆனால் சூரிய நமஸ்காரவும் கூட மதம் சார்நத்தல்ல.
ஸ்லோகம் சொல்வதும் கூட கட்டாயமில்லை. அவை சாதாரண பிரார்த்தனைதான். கட்டாயம் இல்லை. ஸ்லோகங்களுக்குப் பதில் அல்லாவின் பெயரைக் கூறிக் கொள்ளலாம். முஸ்லீம்கள் அனைவரும் திரண்டு வந்து இதில் பங்கேற்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்றார் நாயக்.