மைனர்களிடையேயான காதலை பாலியல் பலாத்காரம் என போக்ஸோவில் தண்டிக்க முடியாது: மேகாலயா ஹைகோர்ட்
ஷில்லாங்: மைனர்களிடையேயான காதலை பாலியல் பலாத்காரம் என போக்ஸோ சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியாது என்கிற தீர்ப்பு வழங்கி இருக்கிறது மேகாலயா உயர்நீதிமன்றம்.
அண்மையில் கர்நாடகா உயர்நீதிமன்றமானது, 18 வயதுக்கு கீழான மைனர்களிடையேயான காதல், அதனடிப்படையிலான உடலுறவுகளை பாலியல் பலாத்காரம் என போக்ஸோ சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியாது என தீர்ப்பளித்திருந்தது. தற்போது மேகாலயா மாநில உயர்நீதிமன்றமும் இதே போல ஒரு தீர்ப்பளித்துள்ளது.

மேகாலயாவில் மைனர் பெண் ஒருவர் ஆசிரியர் ஒருவருடன் பள்ளியில் தங்கி படித்து வந்தார். திடீரென அந்த மைனர் பெண்ணை காணவில்லை என அவரது பெற்றோரிடம் ஆசிரியர் புகார் தெரிவித்தார். இதனையடித்து உள்ளூர் காவல்நிலைய்த்தில் புகார் தரப்பட்டது.
அதேநேரத்தில் மைனர் ஆண் நண்பருடன் மைனர் பெண் சேர்ந்து வாழ்ந்து வருவது தெரியவந்தது. இதனையடுத்து மைனர் பெண்ணை பலாத்காரம் செய்ததாக அந்த சிறுவன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 10 மாத சிறைவாசத்துக்குப் பின் அந்த சிறுவனுக்கு ஜாமீன் கிடைத்தது.
இது தொடர்பான நீதிமன்ற விசாரணையில், தாம் ஒப்புக் கொண்டுதான் மைனர் சிறுவனுடன் உறவு வைத்துக் கொண்டதாக மைனர் சிறுமி வாக்குமூலம் கொடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், மைனர்களிடையேயான காதல், பரஸ்பர ஒப்புதலுடனான உறவு ஆகியவற்றின் அடிப்படையில் இதனை போக்ஸோவில் தண்டிக்கக் கூடிய பலாத்கார குற்றமாக கருத முடியாது என தெரிவித்தது மேகாலயா உயர்நீதிமன்றம்.
அதாவது கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிரொலிப்பதாகவே மேகாலயா நீதிமன்றத்தின் தீர்ப்பும் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications