எனக்கு கிடைத்த சிறந்த ஆசிரியர் என் தாய்: மாணவர்கள் மத்தியில் பிரணாப் முகர்ஜி உருக்கம்
டெல்லி: எனது சிறந்த ஆசிரியர் எனது தாய்தான் என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, மாணவர்கள் மத்தியில் தெரிவித்தார்.
ஆசிரியர் தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில், ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் சர்வோதய வித்யாலயா பள்ளியில் இன்று, 11ம் வகுப்பு மற்றும், 12ம் வகுப்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகள் 300 பேர் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் உரையாடினர்.

அப்போது, ஆசிரியராக மாறி, மாணவ, மாணவிகளுக்கு பிரணாப் பாடம் நடத்தினார். முதலில் இந்திய வரலாறு பற்றிய பாடம் நடத்தினார். பிறகு தனது அரசியல் அனுபவங்கள் பற்றி பேசினார்.
பிரணாப் முகர்ஜி கூறியதாவது: படிக்கும் காலத்தில், நான் ஆவரேஜ் மாணவனாகத்தான் இருந்தேன். மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வந்த நான் கல்வி கற்க மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. நான் பள்ளி செல்ல 10 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணம் செய்வேன். அப்போது சாலை வசதி என்பது அத்தியாவசியமாக இருந்தது. ஆனால் இப்போது, சாலையையும், மின்சாரத்தையும் இஷ்டத்துக்கு பயன்படுத்துகிறோம்.
கிராமத்தை சேர்ந்த நான், இன்று இந்திய தேசிய அரசியலின் மையப்புள்ளியாக மாறியுள்ளதுதான், ஜனநாயகத்தின் அற்புதம். சாமானிய மனிதனும் தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் வாய்ப்பை வழங்கியுள்ளதுதான் ஜனநாயகம்.
எனது மிகச்சிறந்த ஆசிரியர் என்றால் அது எனது தாய்தான். மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பியதும், அன்றைய நாளில் நடந்த நிகழ்வுகளை அப்படியே ஒன்றுவிடாமல் சொல்லுமாறு எனது தாய் என்னிடம் கேட்பார். அப்படி சொல்ல ஆரம்பித்தன் விளைவாக எனக்கு நியாபக சக்தி அதிகரித்தது.
நான் இன்று இந்த நிலையில் இருக்கிறேன் என்றால் அதற்கு எனது அம்மாதான் காரணம். இவ்வாறு பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications