உங்களை விட எங்க அம்மா "அக்மார்க்" இந்தியர்.. மோடிக்கு ராகுல் காந்தி பதிலடி
பல இந்தியர்களை காட்டிலும் என் தாய் சோனியா காந்தி இந்தியரே என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி பதிலடிக் கொடுத்துள்ளார்.
Recommended Video
பெங்களூர்: எனது தாய் சோனியா பல இந்தியர்களை காட்டிலும் இந்தியர் என்றும் அவர் நாட்டுக்காக நிறைய தியாகங்களை செய்துள்ளார் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி பதிலடிக் கொடுத்துள்ளார்.
கர்நாடகத்தில் வரும் 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் முடிவடைந்தது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் கர்நாடகத்தில் காங்கிரஸ் செய்த வளர்ச்சி திட்டங்கள் குறித்து 5 நிமிடங்கள் ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ அல்லது ராகுலின் தாய் மொழியான இத்தாலி மொழியிலோ பேசட்டும் என்று பிரதமர் மோடி ராகுலுக்கு சவால் விட்டிருந்தார்.
எல்லார் மீதும் கோபம்
சோனியா இந்தியர் அல்ல என்பதை மோடி மறைமுகமாக விமர்சனம் செய்ததாக இருந்தது. இதற்கு ராகுலும் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில் பிரதமர் மோடிக்கு அவர் மேலேயே கோபம் உள்ளது. அவர் என் மீது மட்டுமல்ல எல்லார் மேலும் கோபம் அடைகிறார்.
பிரதமரின் தரத்தை காட்டுகிறது
அது அவர் பிரச்சினை, என் பிரச்சினை அல்ல. என் தாய் இத்தாலியனாக இருந்தாலும் அவர் தனது வாழ்நாளில் பெரும்பகுதி இந்தியாவில்தான் செலவிட்டுள்ளார். பல பல இந்தியர்களை காட்டிலும் என் தாய் இந்தியர்தான். இதுபோன்ற கருத்துகளை கூறுவது பிரதமரின் தரத்தை காட்டுகிறது. இதை அவர் விரும்பினால், அவ்வாறே செய்யட்டும்.
வெற்றி பெறுவோம்
பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்துகிறார். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பாஜக காப்பி அடித்துள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
பாஜகவுக்கு தேர்தல் ஜூரம்
பிரதமருக்கு புல்லட் ரயில் குறித்த விவகாரங்களை ஆலோசிக்க விரும்புவார். ஆனால் முக்கியமான விவகாரங்களை ஆலோசிக்க விரும்ப மாட்டார். பாஜகவுக்கு தேர்தல் ஜூரம் வந்துவிட்டது என்றார் ராகுல்.