ஆற்றில் பிணமாக மிதந்த கேரள நடிகை ஷில்பா - சுற்றிச் சுழலும் மர்மங்கள்; பெற்றோர் புகார்
திருவனந்தபுரம்: கேரளாவினைச் சேர்ந்த நடிகை ஒருவர் கரமனை ஆற்றில் பிணமாக மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரத்தை அடுத்த வெள்ளாடு பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜி. இவரது மகள் ஷில்பா. பிளஸ் 2 முடித்துள்ள ஷில்பா பிரபல மலையாள டைரக்டர் பாலசந்திரமேனன் படத்தில் நடித்தார்.
அதன் பிறகு இவருக்கு மலையாளத் தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சந்தன மழா, பிரணயம், சவுபாக்கியவதி ஆகிய தொடர்களில் நடித்தார். இதன் மூலம் பிரபலமான ஷில்பா தனியார் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.

இதற்காக அவரை அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அடிக்கடி வெளியே அழைத்துச் செல்வார். கடந்த சனிக்கிழமையும் பாலராமபுரம் பகுதியில் நடந்த விழாவில் பங்கேற்க அந்த பெண், நடிகை ஷில்பாவை அழைத்துச் சென்றார். அன்று மாலை ஷில்பாவின் பெற்றோர் அவரை தொடர்பு கொண்டபோது, ஷில்பாவின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. எனவே அவர்கள் ஷில்பாவை அழைத்துச் சென்ற பெண்ணை தொடர்பு கொண்டனர்.
அந்தப் பெண்ணோ சம்பவத்தன்று மாலையிலேயே ஷில்பா தன்னுடன் தகராறு செய்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றதாக கூறினார். இதைக் கேட்டு பதறிப்போன பெற்றோர் ஷில்பாவை தேடி அங்குமிங்கும் அலைந்தனர். அப்போதுதான் ஷில்பா கரமனை ஆற்றில் பிணமாக மிதப்பது தெரிய வந்தது. உடனே அவர்கள் போலீசாருடன் அங்கு சென்று பிணத்தை மீட்டனர்.
பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் குறித்து கரமனை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடம் ஷில்பாவின் பெற்றோர், ஷில்பாவை அழைத்துச் சென்ற மர்ம பெண் குறித்தும் தெரிவித்தனர்.
ஷில்பாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும் அவரை அழைத்துச் சென்றவர்கள்தான் ஷில்பாவை கொன்று பிணத்தை ஆற்றில் வீசிச் சென்றிருக்க வேண்டும் என குற்றம் சாட்டினர். ஷில்பாவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்த பிறகே இதற்கு விடை கிடைக்கும் என தெரிகிறது.
இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மர்மமாக இறந்த நடிகை ஷில்பா தமிழிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சிறகுகள் என்ற படத்திலும் அவர் நடித்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications