மாநில சட்டசபையில் எதிர்க்கட்சியே இல்லை என்றால் எப்படி இருக்கும்? நாகாலாந்தில் அரங்கேறும் திருப்பம்!
கோஹிமா: நாகாலாந்து மாநில சட்டசபையில் இனி எதிர்க்கட்சியே இல்லை என்கிற நிலை உருவாகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் என்.பி.பி. ஆளும் கூட்டணி அரசில் இணைய முடிவு செய்துள்ளதுதான் இதற்கு காரணம்.
நாகாலாந்து சட்டசபையானது மொத்தம் 60 உறுப்பினர்களைக் கொண்டது. ஒரு எம்.எல்.ஏ. மரணம் அடைந்ததால் தற்போது 59 எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் உள்ளனர்.
மக்கள் ஜனநாயக கூட்டணிக்கு (பி.டி.ஏ.) 34 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதில் தேசிய ஜனநாயக முன்னேற்றக் கட்சிக்கு (என்.டி.பி.பி) 20 எம்.எல்.ஏக்கள்; பாஜகவுக்கு 12 எம்.எல்.ஏக்கள்; 2 பேர் சுயேட்சைகள் அடங்குவர். எதிர்க்கட்சியான என்.பி.எப் 25 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருக்கிறது.

அரசுடன் இணையும் எதிர்க்கட்சி
நாகலாந்தில் பாஜகவின் எதிர்க்கட்சியான என்.பி.எப், மணிப்பூர் மாநிலத்தில் கூட்டணி கட்சியாக இருக்கிறது. இந்த நிலையில் முதல்வர் நைபியு ரியோவின் அழைப்பை ஏற்று ஆளும் கூட்டணி அரசில் பங்கேற்பது என என்.பி.எப். முடிவு செய்துள்ளது.

பாஜக என்ன முடிவு?
ஆனால் இந்த விவகாரத்தில் பாஜக எந்த முடிவையும் எடுக்கவில்லை. தற்போது பாரதிய ஜனதா கட்சியின் முடிவுக்காக கட்சிகள் காத்திருக்கின்றன. இதனையடுத்து நாகாலாந்து மாநில பொறுப்பாளர் நளின் கோஹ்லியை அம்மாநிலத்துக்கு பாஜக மேலிடம் அனுப்பி வைத்துள்ளது.

2 ஆண்டுகளாக பிரச்சனை
கடந்த 2019-ம் ஆண்டு என்.பி.எப். கட்சியின் 7 எம்.எல்.ஏக்கள் ஆளும் கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் 7 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரியது என்.பி.எப். இதில் தலையிட்ட குவஹாத்தி உயர்நீதிமன்றத்தின் கோஹிமா கிளை, தகுதி நீக்கம் செய்யக் கோரும் மனுக்களை தள்ளுபடி செய்தது. அப்போது முதலே ஆளும் கட்சிக்கு எம்.எல்.ஏக்கள் தாவுவது தொடங்கிவிட்டது. இப்போது ஒட்டுமொத்த கட்சியுமே அரசாங்கத்துடன் கை கோர்க்க முடிவு செய்துள்ளது.

சட்டசபையில் எதிர்க்கட்சி கிடையாது
இதனால் நாகாலாந்து சட்டசபையில் இனி எதிர்க்கட்சியே இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. நாட்டிலேயே எதிர்க்கட்சியே இல்லாத ஒரு மாநிலமாகவும் நாகாலாந்து உருவாகி உள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த என்.பி.எப் பொதுச்செயலாளர் அஹூம்பெபோ கிஹோன், நாகாலாந்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கான ஒப்பந்தம் விரைவில் நிறைவேற உள்ளது. அதற்கான சுமூகமான சூழலை உருவாக்கவே இந்த நிலைப்பாடு மேற்கொள்ளப்பட்டது என்றார்.












Click it and Unblock the Notifications