நாகாலாந்தில் பாஜக கூட்டணிக்கு அடிக்கும் 'லக்' எதிர்க்கட்சிகளே இல்லாத அரசு அமையுமாம்..எப்படி தெரியுமா
ஹோகிமா: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்தில் ஆளும் என்.டி.பி.பி., பா.ஜ.க. கூட்டணி 37 இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனால், மீண்டும் அங்கு பாஜக கூட்டணியே ஆட்சி அமைக்க உள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆட்சி அமைக்க உள்ள பாஜக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முடிவு செய்து இருப்பதால் அங்கு எதிர்க்கட்சிகளே இல்லாத அரசு மீண்டும் ஒருமுறை அமையும் என தெரிகிறது.
வட கிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2 ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில், திரிபுராவில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

37 இடங்களில் அமோக வெற்றி
மேகாலயாவில் என்.பி.பி கட்சி வெற்றி பெற்றது. ஆனாலும் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை அந்த கட்சி பெறவில்லை. இதனால், பாஜக ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. அதேபோல், மற்றொரு வடகிழக்கு மாநிலமான நாகலாந்திலும் ஆளும் பாஜக கூட்டணியே மீண்டும் வெற்றி பெற்றது. நாகலாந்தில் முதல்வர் நைபியு ரியோ தலைமையிலான என்.டி.பி.பி கட்சியின் ஆட்சி நடைபெற்றது. என்.டி.பி.பி., பா.ஜ.க. கூட்டணி 37 இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது.

5-வது முறையாக முதல்வர்
இதன்காரணமாக ஆளும் என்.டி.பி.பி கட்சி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. இதனால் நைபியு ரியோ, 5-வது முறையாக முதல்வர் ஆகிறார். நாகாலாந்தில் மொத்தம் உள்ள 60 இடங்களில் 59 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், 37 இடங்களில் பாஜக வெற்றி பெற்ற நிலையில் ஏனைய 22 இடங்களில் என்.சி.பி கட்சி 7 இடங்களிலும் என்.பி.பி கட்சி 5 இடங்களிலும் எல்.ஜே.பி (ராம்விலாஸ்), நாகா மக்கள் முன்னணி, ஆர்.பி.ஐ(அத்வாலே) ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களில் வெற்றி பெற்றன. ஜேடியூ கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.

நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பதாக
சுயேட்சை வேட்பாளர்கள் 4 இடங்களில் வெற்றி பெற்றனர். பாஜக கூட்டணிக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மையை தாண்டியும் எண்ணிக்கை இருப்பதால் அங்கு மீண்டும் ஆட்சி அமைப்பதில் எந்த சிக்கலும் இல்லை. இந்த நிலையில், அங்கு கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவை ஆளும் கூட்டணிக்கு அளிக்க முன்வந்துள்ளனர். எல்.ஜேபி (ராம்விலாஸ்), ஆர்பிஐ(அத்வாலே), ஜேடி(யூ) ஆகிய கட்சிகள் ஏற்கனவே நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பதாக ஆதரவுக்கடிதத்தை அளித்துள்ளன.

எதிர்க்கட்சிகளே இல்லாத அரசு
மூன்றாவது பெரிய கட்சியான என்.சி.பியும் நைபியு ரியோ தலைமையிலான என்.டி.பி.பி கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கடிதம் வழங்கியுள்ளது. அதேபோல் என்.பி.எப் கட்சியும் அரசுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்து இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும் எம்.எல்.ஏவுமான அச்சும்பியோ கிகோன் தெரிவித்துள்ளார். இருந்தாலும் இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவை அக்கட்சி எடுக்கவில்லை. ஏறத்தாழ அனைத்து கட்சிகளும் என்.டி.பி.பி - பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வந்திருப்பதால் நாகலாந்தில் மீண்டும் ஒருமுறை எதிர்க்கட்சிகளே இல்லாத அரசு அமைய உள்ளது.












Click it and Unblock the Notifications