6 கேட்ட நாயுடு .. ஒன்றுதான் என்ற மோடி... 1+1 தருவதாக ஆறுதலளித்த ராஜ்நாத் சிங்
டெல்லி: சந்திரபாபு நாயுடுவின் பெருத்த எதிர்பார்ப்பு சற்று புஸ் ஆகியுள்ளது போலத் தெரிகிறது. முதலில் அவர் 3 கேபினட், 3 இணை அமைச்சர்கள் என 6 பதவி தேவை என்று கேட்டுள்ளார். ஆனால் மோடியோ இப்போதைக்கு ஒன்றுதான் என்று கூறி விட்டாராம். இருந்தாலும், ஒரு கேபினட், ஒரு இணை அமைச்சர் பதவி தருவதாக பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளாராம்.

இதனால் நாயுடு சற்று ஏமாற்றமடைந்திருப்பதாக தெரிகிறது. இருப்பினும் இந்த பார்முலாவுக்கு அவர் ஒத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மோடி அமைச்சரவையில் நாயுடுவின் தெலுங்கு தேசத்திற்கும் இடம் கிடைக்கிறது. இக்கட்சி சீமாந்திராவில் சட்டசபையில் ஆட்சியைப் பிடித்துள்ளது. லோக்சபா தேர்தலில் 16 இடங்களில் வென்றுள்ளது. ராஜ்யசபாவையும் சேர்த்து தெலுங்கு தேசத்திற்கு மொத்தம் 22 எம்.பிக்கள் உள்ளனர். எனவே நாயுடுவும், பாஜகவுக்கு முக்கியமானவராக மாறியிருக்கிறார்.
இந்த நிலையில் தெலுங்கு தேசத்திற்கு 4 அமைச்சர் பதவி வழங்கப்படும். அதில் ஒரு கேபினட், 3 இணை அமைச்சர் பதவி கிடைக்கும் என்று கூறப்பட்டு வந்தது. இதுதொடர்பாக மோடியை நேற்று சந்தித்துப் பேசியிருந்தார் நாயுடு.
பின்னர் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்துப் பேசினார். அப்போது நாயுடு தரப்பில் 3 கேபினட் அமைச்சர்களாவது வேண்டும் என்று கோரிக்கை வைக்ப்பட்டதாக தெரிகிறது.
ஆனால் நாயுடுவுக்கு திருப்பதியில் போடும் நாமத்தைப் போல, ஒரு கேபினட், ஒரு இணை அமைச்சர் பதவி...டீக்கே என்று கேட்டாராம் ராஜ்நாத் சிங். அதைக் கேட்டு நாயுடு அப்செட்டாகி விட்டாராம். பாஜகவின் ஆஃபர் அவருக்கு அதிருப்தியை அளித்துள்ளதாக தெரிகிறது.
முன்னதாக மோடியைச் சந்தித்தபோது நாயுடு தனது கட்சிக்கு மொத்தம் 6 இடம் தேவை. அதில் 3 கேபினட், 3 இணை அமைச்சர் என்று கூறினாராம். ஆனால் மோடி ஒரேயடியாக இது முதல் கட்ட அமைச்சரவை. இதில் ஒரு கட்சிக்கு ஒரு இடம்தான் என்று திட்டவட்டமாக கூறி விட்டாராம்.
இதையடுத்தே ராஜ்நாத் சிங்கைச் சந்தித்துப் பேசினாராம் நாயுடு. அப்போது வேண்டுமானால் ஒரு இணை அமைச்சர் பதவியையும் இப்போது சேர்த்துத் தரலாம் என்று சிங் அறிவுரை கூறினாராம். இதை தற்போதைக்கு நாயுடு ஏற்றுள்ளதாகவும் சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications