ரூ.5 கோடியில் சந்திரபாபு நாயுடுவுக்கு குண்டு துளைக்காத சொகுசு பஸ்...
ஹைதராபாத்: நவீன வசதிகளுடன் குண்டு துளைக்காத பேருந்து ஒன்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்காக 5 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்டுள்ளது. எந்த சாலையிலும் எளிதாக செல்லும் இந்த பேருந்தில் குளியல் அறை, கழிவறை, டைனிங் ஹால், மீட்டிங் ஹால் மற்றும் இன்டர்நெட், வை-பை, கம்ப்யூட்டர் வசதிகள் உள்ளதாம்.
ஆந்திர முதல்வர் மாதம் ஒரு மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் செய்து மக்களின் குறைகளை கேட்டு வருகிறார். அவரது சுற்றுப் பயணத்துக்காக ரூ.5 கோடி செலவில் குண்டு துளைக்காத சொகுசு பேருந்தை ஆந்திர அரசு போக்குவரத்து துறை வாங்கி உள்ளது. துப்பாக்கி சூட்டிலும், குண்டு வெடிப்பிலும் சேதம் அடையாத வகையில் பேருந்து வடிவமைக்கப்பட்டு உள்ளது.
பேருந்தில் அமைக்கப்பட்டுள்ள கேமிரா மூலம் வெளியே நடக்கும் நிகழ்ச்சிகளை பேருந்துக்குள் இருக்கும் டி.வி. திரையில் பார்க்கும் வசதியும் உள்ளது. வெளியில் உள்ளவர்கள் பேசுவதை தெளிவாக கேட்கும் வகையில் ஸ்பீக்கரும் உள்ளது. பேருந்து டிரைவருக்கு சாலையின் பாதைகள் தெள்ளத்தெளிவாக தெரிய வசதி செய்யப்பட்டு உள்ளது.
சண்டிகரில் உள்ள ஜே.சி.டி.சி. நிறுவனம் இந்த பேருந்தை வடிவமைத்து உள்ளது. இந்த பேருந்தில் 9 பேர் பயணம் செய்யலாம். பேருந்துக்குள் குளியல் அறை, கழிவறை, டைனிங் ஹால், மீட்டிங் ஹால் மற்றும் இன்டர்நெட், வை-பை, கம்ப்யூட்டர் வசதிகள் உள்ளது. எந்த சாலையிலும் பேருந்து எளிதாக செல்லும்.
விஜயவாடாவில் உள்ள முதல்வர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்ட இந்த பேருந்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு பார்வையிட்டார். பேருந்தின் உள் அலங்காரத்தில் சில மாற்றங்களை செய்ய யோசனை கூறினார். குக்கிராமங்களுக்கு செல்லும் சந்திரபாபு நாயுடு இரவில் இந்த பேருந்திலேயே ஓய்வு எடுத்துக்கொள்வார் என தெரிகிறது.